மாமல்லபுரத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை
மாமல்லபுரம்:
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக சாரல் மழை கொட்டி வருகிறது.
இந்த நிலையில் மாமல்லபுரம் சுற்று வட்டார கடலோர பகுதிகளான கோவளம், நெம்மேலி, சூலேரிக்காடு, பட்டிபுரம், தேவநேரி, கொக்கிலமேடு, வெண்புருஷம், கல்பாக்கம், சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம் மற்றும் கடம்பாடி, மணமை, வடகடம்பாடி, பெருமாள் ஏரி, பையனூர், காரணை பகுதிகளில் நேற்று மாலை சூறை காற்றுடன் கன மழை பெய்தது.
இரவு 9 மணி வரை மழை நீடித்தது. இதனால் இரவில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
சூறை காற்றால் பல இடங்களில் விவசாயிகளின் வாழை மரங்கள் சாய்ந்தது. மாமல்லபுரம் நகரின் முக்கிய வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அதனை மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
கன மழை காரணமாக மாமல்லபுரத்தில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.