செய்திகள்

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.54 லட்சத்தில் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கினார்

Published On 2016-06-14 16:46 IST   |   Update On 2016-06-14 16:46:00 IST
அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் வழங்கினார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 307 மனுக்களை பொது மக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர் மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் 13 கிராம ஊராட்சிகளுக்கு ஊக்க நிதிக்காக ரூ.54 லட்சம் மதிப்பிலான காசோலைகளையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறையின் சார்பில் ரூ.82 ஆயிரத்து 500 மதிப்பில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளும், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் என ஆகமொத்தம் 28 நபர்களுக்கு ரூ.54 லட்சத்து 82 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல் ராஜ் வழங்கினார்.

கூட்டத்தில், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரஸ்வதி கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பா.லலிதாவதி, துணை ஆட்சியர் (சமூகநல பாதுகாப்புத் திட்டம்) மங்கலம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், திட்ட மேலாளர் புதுவாழ்வுத் திட்டம் கதிர்வேல், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News