செய்திகள்
கூடுவெளிச்சாவடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிப்பதை படத்தில் காணலாம்.

வகுப்பறை இல்லாததால் மரத்தின் அடியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவர்கள்

Published On 2016-06-14 08:32 IST   |   Update On 2016-06-14 08:32:00 IST
சிதம்பரம் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்கள் மரத்தின் அடியில் அமர்ந்து பாடம் படிக்கிறார்கள்.
சிதம்பரம்

சிதம்பரத்தில் இருந்து கந்தகுமாரன் கிராமத்துக்கு செல்லும் சாலையில் உள்ளது கூடுவெளிச்சாவடி கிராமம். இந்த ஊரில் இருந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கூடமானது, கடந்த 2011-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

ஆனால் கூடுதலாக ஆரம்பிக்கப்பட்ட 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்டிக்கொடுக்கப்படாததால், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சொந்தமான கட்டிடத்திலேயே உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 10 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள், 200 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையில் ஒரு வகுப்பறை கட்டிடமானது சேதமடைந்தது. அதனால் அந்த கட்டிடத்தில் இருந்த 6-ம் வகுப்பு மாணவர்களை அங்கன்வாடி கட்டிடத்துக்கு மாற்றினார்கள். ஆனால் 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறை இல்லாததால், அவர்களை பள்ளி வளாகத்தில் உள்ள அரச மரத்தின் அடியில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள்.

இந்த பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் கூட இல்லாததால், மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது மாடுகளும் பள்ளி வளாகத்துக்குள் வருகின்றன. இது மாணவர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதால், கம்புகளை நட்டு நேற்று, வேலி அமைத்துக்கொண்டு இருந்தனர்.

இதற்கிடையே தொடக்கப்பள்ளிக்கூட கட்டிடத்தில் உயர்நிலைப்பள்ளி வகுப்புகள் நடைபெறுவதால், தொடக்கப்பள்ளியானது, அருகில் உள்ள மற்றொரு பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆசிரியர்களும் தரையில் அமர்ந்து பாடம் கற்றுக்கொடுக்கின்றனர். அங்கு 3 அங்கன்வாடி பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லி கொடுத்தனர்.

இதுபற்றி ஆசிரியர் ஒருவரிடம் கேட்ட போது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை 4 வயதிலேயே ஆங்கில பள்ளிகளில் சேர்த்து விடுகிறார்கள். இதனால் கிராமப்புற அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த 3 பிள்ளைகளுக்கு அடுத்த வருடம் 5 வயது ஆகி விடும் என்பதால் இவர்களை இங்கேயே சேர்த்துக்கொள்ளலாம் என்பதற்காக இங்கே வைத்து உள்ளோம் என்றார்.

மரத்தின் அடியில் மாணவர்களை அமரவைத்து பாடம் நடத்துவது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் சார்பில் ஒருகோடியே 62 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு 8 வகுப்பறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இன்னும் 3 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிவடைந்து விடும், அதன் பிறகு 6 முதல் 10 வரையுள்ள வகுப்புகள் புதிய கட்டிடத்தில் செயல்படும். இப்போது உயர்நிலைப்பள்ளி செயல்படும் கட்டிடங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படும் என்றார்.

Similar News