செய்திகள்

அரியலூர் அருகே விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் பலி

Published On 2016-06-13 21:55 IST   |   Update On 2016-06-13 21:55:00 IST
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் செந்துறை சிறுகடம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் நாராயணசாமி (வயது65), ராஜேந்திரன். இவர்கள் இருவரும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்றனர்.

ஜெயங்கொண்டம் சூரிய மணல்  பெட்ரோல் பல்க் அருகே செல்லும் போது அந்த வழியாக  ராஜசேகர், வெங்கட்குமார் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதே போல் அப்பகுதியை சேர்ந்த  11-ம்வகுப்பு மாணவி சாந்தி (16) பெட்ரோல் பல்க்கில் இருந்து சாலையை நோக்கி  மொபட்டில் வந்தார்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக 3 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் நாராயணசாமி,  ராஜசேகர் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன. இதில் சாந்தி லேசான காயமடைந்தார். மற்ற 4பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

விபத்தில் காயமடைந்த 5 பேரும்  அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் சாந்தியை தவிர மற்ற 4பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை நாராயணசாமி இறந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News