செய்திகள்

அரியலூர் அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டிக்கொலை: தந்தை- மகன் வெறிச்செயல்

Published On 2016-06-11 16:04 IST   |   Update On 2016-06-11 16:04:00 IST
அரியலூர் அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள செட்டிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). விவசாயி. இவருக்கு சொந்தமாக அங்கு நிலம் உள்ளது. அதன் அருகே சின்னத்துரை (60) என்பவருக்கு சொந்தமாகவும் நிலம் உள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. நேற்றிரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சின்னதுரை, அவரது மகன் ராஜமாணிக்கம் ஆகிய 2பேரும் சேர்ந்து சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த வெட்டுக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திர பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சின்னதுரை, அவரது மகன் ராஜமாணிக்கம் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News