செய்திகள்

நூறுநாள் திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

Published On 2016-05-27 14:23 IST   |   Update On 2016-05-27 14:23:00 IST
ஜெயங்கொண்டம் அருகே நூறுநாள் திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து பணியாளர்கள் சாலைமறியல் செய்தனர்.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தண்டலை கிராமத்தில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் நூறுநாள் திட்டத்தில் செய்த பணிக்கு இதுவரை சம்பளம் பட்டுவாடா செய்யப்படவில்லை. கடந்த மூன்று வாரமாக தொடர்ந்து பணம் பட்டுவாடா செய்யாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். முறையாக சம்பளம் வழங்காததை கண்டித்து விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலை கல்லாத்தூர் கடைவீதியில் தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, ஒன்றிய ஆணையர் கலையரசு, ஊராட்சிமன்ற தலைவர் அன்பழகன், வங்கி மேலாளர் திருமாவளவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் அவர்கள் தினம் 150 கார்டுகளுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என கூறியதன் அடிப்படையில் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Similar News