செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2016-05-23 20:48 IST   |   Update On 2016-05-23 20:48:00 IST
ஜெயங்கொண்டம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மலங்கன்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் செல்வதுரை (வயது33). இவருக்கும் செந்துறை அருகே உள்ள பூமுடையான் குடிகாடு கிராமத்தை சேர்ந்த சின்னப்பா-செல்லம்மாள் தம்பதியரின் மகள் சிவகாமி(24) க்கும் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது 9 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன. இந்தநிலையில் மேலும் 10 பவுன் நகை வாங்கி வரச் சொல்லி சிவகாமியை செல்வதுரை குடும்பத்தினர் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சிவகாமியின் பெற்றோர், விரைவில் 10 பவுன் போடுவதாக சொல்லி சிவகாமியை மருமகன் வீட்டில் விட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் சிவகாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து செல்வதுரை ஜெயங்கொண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News