செய்திகள்

எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

Published On 2016-05-12 08:44 IST   |   Update On 2016-05-12 09:41:00 IST
எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் பிரசாரத்தை தொடங்கினார்.
ஆலந்தூர்:

ஆலந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் மணப்பாக்கம் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

வேட்பாளரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர் வழியில் வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அரசை நடத்திட, இரவு பகலாக பணியாற்றி தீய சக்திகளை விரட்ட வேண்டும். எம்.ஜி.ஆர். நடத்திய நல்லாட்சியை ஜெயலலிதா தலைமையில் நடத்த உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆலந்தூர் தொகுதியில் மக்கள் பிரச்சினைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்படும். தொகுதியில் பெண்களுக்காக கல்லூரி அமைக்கப்படும். மழைக்காலங்களில் வெள்ள நீர் வராமல் தடுக்க கால்வாய்கள் ஏற்படுத்தப்படும். வெள்ள நிவாரண நிதி, கிடைக்க பெறாதவர்களுக்கு பெற்று தர நடவடிக்கை எடுப்பேன்.

மணப்பாக்கம், முகலிவாக்கம் போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் விரைவுபடுத்தப்படும். தொகுதிகளில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதை பணிகள் விரைந்து செய்யப்படும். போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாமல் வடிகால்வாய்கள் அமைக்கப்படும்.

மணப்பாக்கம் மயானம், ராணுவ வளாகத்தில் இருந்து தனியாக பிரிக்கப்படும். மயானத்திற்கு செல்ல தனி வழி ஏற்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவிஜயகுமார், மாநகராட்சி கவுன்சிலர் மணப்பாக்கம் பாண்டியன், மணப்பாக்கம் காமராஜ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றனர்.

Similar News