செய்திகள்

குடிபோதையில் திட்டியதால் வாலிபர் சுட்டுக்கொலை: கைதான நண்பர் வாக்குமூலம்

Published On 2016-04-09 16:21 IST   |   Update On 2016-04-09 16:21:00 IST
குடிபோதையில் திட்டியதால் வாலிபர் சுட்டுக்கொலை கைதான நண்பர் வாக்குமூலம்

வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 39). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகில் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் (27) செங்கல் சூளை நடத்தி வந்தார். இவர் நாட்டு துப்பாக்கி வைத்து இருந்தார். ரவியும், சங்கரும் நண்பர்களாக பழகி வந்தனர். இரவில் முயல் வேட்டைக்கு சென்று வந்தார்கள்.

நேற்று முன்தினம் இரவு ரவி வீட்டில் இருந்தார். அப்போது சிலர் முயல் வேட்டைக்கு ரவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் அங்குள்ள பாலத்தின் அருகே ரவி பிணமாக கிடந்தார். விசாரணையில் துப்பாக்கியால் சுட்டு குண்டு பாய்ந்து ரவி இறந்திருப்பது தெரிய வந்தது. சங்கரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து ரவியை தீர்த்துக்கட்டியது அம்பலமானது.

இதையொட்டி சங்கர் அவருடன் சூளையில் வேலை செய்த அய்யப்பன், கண்ணன், ஞானவேல், தர்மதுரை மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் சங்கர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

ரவியும், நானும் நண்பர்கள். ரவிக்கு குடிப்பழக்கம் இருந்தது. சமீபத்தில் குடிபோதையில் ரவி என்னை தரக்குறைவாக திட்டினான். பொது இடத்தில் திட்டியதால் நான் வேதனை அடைந்தேன். அவமானம் தாங்க முடியாததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் இதுபற்றி கூறினேன். அவர்களும் ரவியை கொலை செய்ய சம்மதம் தெரிவித்தனர். செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளர்களை ரவியின் வீட்டுக்கு அனுப்பி அவரை முயல் வேட்டைக்கு என்று அழைத்து வருமாறு கூறினேன். அவர்கள் அழைத்து வந்தார்கள்.

ரவி உள்பட 8 பேர் முயல் வேட்டைக்கு புறப்பட்டு சென்றோம். சேப்பாக்கம் கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றதும் ரவியை தாக்கினேன். அவர் கீழே விழுந்தார். உடனே என் நாட்டு துப்பாக்கியால் ரவியை சுட்டேன். அவர் உடலில் குண்டு பாய்ந்து செத்தார். இந்த கொலையை விபத்து என்று கூறி மறைக்க திட்டமிட்டோம். அவரது உடலை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேப்பாக்கம் மேம்பாலம் அருகில் போட்டு உடலின் மீது மோட்டார் சைக்கிளை போட்டோம். விபத்தில் ரவி அடிபட்டு இறந்தது போல் காட்ட முயன்றோம்.

நாட்டு துப்பாக்கி மற்றும் பேட்டரி, டார்ச் லைட் ஆகியவைகளை கிணற்றில் வீசி விட்டு ஓடி விட்டோம். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

Similar News