உள்ளூர் செய்திகள்

கோவையில் ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற 2 பேருக்கு தர்ம அடி

Published On 2023-06-29 08:48 GMT   |   Update On 2023-06-29 08:48 GMT
  • பூமிக்கடியில் புதையல் இருப்பதாகவும் அதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும் சுதாகரிடம் கூறியுள்ளனர்.
  • தம்பதியினர் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). இவர் அதே பகுதியில் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் குடியா (35) மற்றும் பீம் (42). இவர்கள் தற்போது கோவையில் வசித்து வருகிறார்கள். 2 பேரும் சுதாகரின் கடைக்கு தினமும் பழஜூஸ் குடிக்க வருவது வழக்கம்.

இவர்கள் தங்கள் ஊரில் பூமிக்கடியில் புதையல் இருப்பதாகவும் அதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும் அவரிடம் கூறியுள்ளனர். இதனை நம்பிய சுதாகர் மற்றும் அவரது மனைவி ரூ.25 ஆயிரத்தை அவர்களிடம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று ஒப்பணக்கார வீதியில் உள்ள கோவிலுக்கு வந்து நகைகளை பார்க்க வருமாறு பீம் அழைத்துள்ளார். இதையடுத்து தம்பதியினர் கோவிலுக்கு பணத்துடன் சென்றனர். ஆனால் குடியா , பீம் 2 பேரும் நகைகளை காட்டாமல் பணத்தை நைசாக திருடி செல்ல முயன்றனர்.

உடனே சுதாரித்து கொண்ட தம்பதியினர் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News