கார் மோதிய விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
- மேம்பாலம் அருகே சென்றபோது கார் ஒன்று வசந்த் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சுபேதர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் வசந்த் (வயது22). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் போத்தாபுரத்தில் உள்ள மேம்பாலம் அருகே சென்றபோது கார் ஒன்று வசந்த் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து வசந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டபள்ளி போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் தனுஷ் (24). தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டபள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று தனுஷ் மீது பின்னால் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தனுஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.