உள்ளூர் செய்திகள்

சென்னை அண்ணாசாலை மின்வாரிய அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற 2 பேர் கைது

Published On 2023-09-21 08:30 GMT   |   Update On 2023-09-21 08:30 GMT
  • மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
  • தலையில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

சென்னை:

தமிழ்நாட்டில் 5,493 ஒப்பந்த மின்சார கேங்மேன் தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கக் கோரி சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தொகுதி அலுவலகம் முன் ஆயிரக்கணக்கானோர் நேற்று திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து இன்று அண்ணாசாலை மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக 50-க்கும் மேற்பட்டோர் இன்று திரண்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.

அதை தொடர்ந்து இன்று காலை 11.30 மணி அளவில் 2 கேங்மேன் தொழிலாளர்கள் கையில் டீசல் கேன்களுடன் திடீரென அண்ணா சாலை மின்வாரிய அலுவலகம் முன் வந்தனர். அவர்கள் தலையில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Tags:    

Similar News