மகராஜகடை வனப்பகுதிக்கு 2 யானைகள் விரட்டியடிப்பு
- மாந்தோப்பில் முகாமிட்டிருந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
- யானைகள் இரவு நேரத்தில் வெளியே வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் யாரும் இரவு வெளியே வர வேண்டாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ககிரி அணை அருகே முகாமிட்டிருந்த 2 யானைகள் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் ஏரிக்கு வந்தன. அங்கு ஆனந்த குளியல் போட்ட யானைகள் இரவு அந்த பகுதியிலேயே முகாமிட்டன.
நேற்று முன்தினம் அதிகாலை அந்த யானைகள் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியம், ராயக்கோட்டை மேம்பாலம், புதிய பஸ் நிலையம் மற்றும் நகருக்குள் வந்தன. பின்னர் கொத்தபெட்டா, சிப்பாயூர் வழியாக சாமந்தமலை பகுதியை அடைந்தன.
அங்கு விவசாயி பெருமாள் என்பவரை யானைகள் தாக்கி தந்தத்தால் குத்தியதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் சாமந்தமலை பகுதியில் மாந்தோப்பில் முகாமிட்டிருந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் அந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதையடுத்து யானைகள் மெல்ல நகர்ந்து, மகராஜகடை பகுதிக்கு சென்றன. அங்கு வனப்பகுதியையொட்டி அந்த யானைகள் சுற்றி வருகின்றன. அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். யானைகள் இரவு நேரத்தில் வெளியே வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் யாரும் இரவு வெளியே வர வேண்டாம் என்றும், யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் யானை தாக்கி உயிர் இழந்த விவசாயி பெருமாள் வீட்டிற்கு அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, அவைத் தலைவர் கிருஷ்ணன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.