உள்ளூர் செய்திகள்

கோவையில் போதையில் இருப்பவர்களிடம் நகைகள் பறித்த 2 பேர் கைது

Published On 2023-01-20 09:09 GMT   |   Update On 2023-01-20 09:09 GMT
  • லலித் ராகவ் தனியார் நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக வேலை பார்த்து வருகிறார்.
  • லலித் ராகவ், முத்து செல்வனை தனது வீட்டிற்கு மது குடிக்க அழைத்தார்.

கோவை,

கோவை வெங்கிட்டா புரம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் லலித் ராகவ் (வயது 29). தனியார் நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு மது குடித்து கொண்டு இருந்த கவுண்டம்பாளைத்தை சேர்ந்த மருந்து கடை உரிமையாளர் முத்து செல்வன் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நட்பாக மாறியது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து மது அருந்தினர்.

சம்பவத்தன்று லலித் ராகவ், முத்து செல்வனை தனது வீட்டிற்கு மது குடிக்க அழைத்தார். அதன்படி அவர் தனது நண்பரான கே.கே. புதூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஷாஜகான் (43) என்பவருடன் சென்றார்.

அங்கு அவர்கள் ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். அப்போது முத்து செல்வன், ஷாஜகான் ஆகியோர் சேர்ந்து லலித்ராகவுக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்தனர். இதில் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவரிடம் 2½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

மறுநாள் காலையில் போதை தெளிந்து எழுந்த அவர் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து செல்வன், ஷாஜகான் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே டாஸ்மாக் பாரில் போதையில் இருந்த கே.கே. புதுரை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு உதவி செய்வது போல நடித்து அவரிடம் இருந்து 2 பேரும் முக்கால் பவுன் மோதிரத்தை பறித்தது தெரிய வந்தது.

மேலும் போலீசார் இவர்கள் 2 பேரிடமும் இதே போல மது போதையில் இருப்பவர்களை குறி வைத்து வேறு யாரிடமாவது நகைகளை பறித்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News