உள்ளூர் செய்திகள்

கமிஷனர் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட காட்சி.

குப்பைகள் கொட்ட எதிர்ப்பு:கமிஷனர் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகை நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

Published On 2023-03-18 09:27 GMT   |   Update On 2023-03-18 09:27 GMT
  • நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் இருந்து வருகின்றது.
  • கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி பொதுமக்களுடன் நேரில் சென்று குப்பைகள் கொட்டி இருக்கும் இடத்தை பார்வையிட்டார்

கடலூர்

நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் இருந்து வருகின்றது.  இதன் காரணமாக நகராட்சி ஊழியர்கள் ஆறுகள் ஓரமாகவும் மற்றும் மக்கள் அதிகம் வசிக்காத பகுதிகளில் குப்பைகளை கொட்டி எரித்து வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் புகார் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது வைடிப்பாக்கம், மோரை எவரட்புரம் பகுதியில் அகற்றப்படும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டி வருகின்றனர். இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து அதனை சரிப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் இன்று காலை சரவணபுரம் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்பதனை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்குவது குறித்து நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதற்காக நெல்லிக்குப்பம் கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது 25, 26, 27 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் திடீரென்று கமிஷனர் மகேஸ்வரி வாகனத்தை சூழ்ந்து முற்றுகையிட்டனர பின்னர் எந்தவித அனுமதியும் இல்லாமல் குப்பைகள் கொட்டி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றோம். மேலும் குப்பைகளை எரித்து வருவதால் மூச்சு திணறல், வாந்தி போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதால் நாங்கள் மிகுந்த அவதி அடைந்து வருகிறோம். இது தொடர்பாக நீங்கள் நேரில் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி பொதுமக்களுடன் நேரில் சென்று குப்பைகள் கொட்டி இருக்கும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் இதற்கு மாற்று நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார் . இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது 

Tags:    

Similar News