செய்திகள்
தனுஷ் கட்அவுட்

திட்டமிட்டபடி ரிலீஸ் ஆனது கர்ணன்... கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்

Published On 2021-04-09 10:14 IST   |   Update On 2021-04-09 12:45:00 IST
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் இன்று வெளியானது.
சென்னை:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே உட்கார அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

எனினும், கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் இன்று வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவிப்பு வெளியிட்டார்.



இதுதொடர்பாக அவர் நேற்று தனது டுவிட்டரில், சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின்படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று எஸ்.தாணு பதிவிட்டிருந்தார்.

அதன்படி, கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி இன்று திரைக்கு வந்துள்ளது. இதனால், காலையிலேயே தியேட்டர்கள் முன் திரண்ட ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

திரையரங்குகள் முன் வைக்கப்பட்டு உள்ள பல அடி உயர கட் அவுட்டில் இருந்து மலர்களை ரசிகர்கள் தூவினர். கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தும் கொண்டாடினர். இதனை கீழேயிருந்து ரசிகர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படங்களாக பதிவு செய்து வெளியிட்டவண்ணம் உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் திரையரங்குகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Similar News