செய்திகள்

ஹூன்டாய் கார் மாடல்களின் விலை ரூ.84,867 வரை உயர்வு

Published On 2017-09-17 17:07 IST   |   Update On 2017-09-17 17:07:00 IST
இந்தியாவில் எஸ்.யு.வி. ரக கார்களுக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து ஹூன்டாய் நிறுவன கார்களின் விலை உயர்த்தப்படுவதாக ஹூன்டாய் மோட்டார் இந்தியா தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் ஜி.எஸ்.டி. எனும் புதிய வரிமுறை ஜூலை 1, 2017 முதல் அமலானது. இதனால் ஆடம்பர கார்கள் முதல் எஸ்.யு.வி. மாடல்களின் விலை குறைந்தது. எனினும், ஜி.எஸ்.டி. கவுன்சில் எஸ்.யு.வி. ரக வாகனங்களின் ஜி,எஸ்.டி. வரி மாற்றியமைத்தது. புதிய வரிமுறை செப்டம்பர் 11-ம் தேதி முதல் அமலான நிலையில் ஹூன்டாய் நிறுவன கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. நடுத்தர மாடல் கார்களுக்கு 45 சதவிகிதமாகவும், பெரிய கார்களில் 48 சதவிகிதம் மற்றும் 4 மீட்டர் மற்றும் 170 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவை மிஞ்சும் மாடல்களுக்கு 50 சதவிகிதம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹூன்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வெவ்வேறு மாடல்களின் விலையும் அதிகபட்சமாக ரூ.84,867 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலைட் i20 மாடலின் 1.4 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேடிக் விலை ரூ.12,547 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.



இதுதவிர நடுத்தர மாடலான வெர்னா விலை ரூ.29,090 மற்றும் எஸ்.யு.வி. கிரெட்டா விலை ரூ.20,900 மற்றும் ரூ.55,375 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எலான்ட்ரா மாடல்களின் விலையில் ரூ.50,312 முதல் ரூ.75,991 வரையிலும், டக்சன் விலையில் ரூ.64,828 முதல் ரூ.84,867 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் எஸ்.யு.வி. மாடலின் விலையை ரூ.21,000 முதல் ரூ.72,000 வரை ஒவ்வொரு இன்ஜின் மற்றும் மாடல்களுக்கு ஏற்ப அதிகரித்தது. முதற்கட்டமாக ஹோன்டா கார்ஸ் இந்தியா தனது சிட்டி செடான், எஸ்.யு.வி., பி.ஆர்.-வி., சி.ஆர்.-வி உள்ளிட்ட மாடல்களின் விலையில் ரூ.7003 முதல் ரூ.89,069 வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News