விருத்தாசலத்தில் ஜெயலலிதா நாளை பிரச்சாரம்
விருத்தாசலம்:
முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நேற்று சென்னையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 21 அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா விருத்தாசலத்தில் நாளை மாலை தேர்தல் பிரசாரம் செய்கிறார். அப்போது கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 13 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
இதற்காக விருத்தாசலத்தில் சித்தலூர், ஆலிச்சிக்குடி சாலையில் 100 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மேடைகள் அமைக்கும் பணி, தொண்டர்கள் நிற்க வசதிகள் ஹெலிகாப்டர் தளம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் நாளை(திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மேல் விருத்தாசலத்திற்கு வருகிறார்.
பின்னர் அவர் காரில் ஏறி கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்கிறார். இந்த பிரசாரக் கூட்டத்தில் 3 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்பதால் 5 மாவட்டத்தை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் தகவல்களை முறையாக பரிமாற்றம் செய்யவும் விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஹெலி பேடு, மேடை அமைக்குமிடம் தொண்டர்கள் அமருமிடம் உட்பட பல பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த வசதியாக மேடைக்கு எதிர்புறம் கருவேப்பிலங்குறிச்சி சாலை, அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளிகள், ஆலிச்சிக்குடி சாலை உட்பட 4 இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பணிகளை வடக்கு மண்டல ஐ.ஜி.பெரியசாமி பார்வையிட்டு மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.