செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட படுகொலை - திருமாவளவன்

Published On 2018-05-23 06:27 GMT   |   Update On 2018-05-23 06:27 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட படுகொலை என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #SterliteProtest #BanSterlite #Thirumavalavan

சென்னை:

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மே 22- அரசப் பயங்கரவாதத்தின் கொடுந்துயர நாளாக அமைந்துவிட்டது. காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில்  மூன்று பெண்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து கவலைக் கிடமான வகையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50-க்கும் மேலானோர் காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்தப் பெருந்துயர வன்கொடுமைகளைக் காவல் துறையினர் அரங்கேற்றியிருப்பது சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவதற்காகத் தான் என்று சொன்னால் அது ஏற்கக்கூடியதில்லை.

இது திட்டமிட்ட ஒரு கொடூரமான அரசப் பயங்கரவாத ஒடுக்கு முறை! இனி எப்போதும் பொதுமக்கள் ஓரிடத்தில் பல்லாயிரக் கணக்கில் ஒன்று கூடும் எண்ணம் எழவே கூடாது என்கிற வகையில் முடிவெடுத்து நடத்தப்பட்ட ஒரு ‘பெருந்திரள் படுகொலை’.

ஜல்லிக்கட்டு உரிமைக்காக மெரினாவில் மக்கள் கட்டுக்கடங்காத அளவில் குவிந்ததைப் போல, கட்சி சார்பற்ற பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் ஓரிடத்தில் திரளுவது, அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை வெகுவாக அச்சுறுத்தியுள்ளது.

அவ்வாறு இன்று தூத்துக்குடியில் பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டெழுந்தது ஆளும் வர்க்கத்தினருக்குக் கடும் எரிச்சலை மூட்டியுள்ளது. அன்று மெரினா, இன்று தூத்துக்குடி (நாளை) எங்கோ என்கிற வகையில் அடுத்தடுத்து ‘பெருந்திரள் எழுச்சித்’ தொடர்ந்துவிடக் கூடாதென்கிற ஒரு தீர்க்கமான முடிவுக்கு அதிகார வர்க்கம் வந்துள்ளது. தூத்துக்குடியோடு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றே ஆளும் வர்க்கம் திட்டமிட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் தான் அவர்கள் அரங்கேற்றியுள்ள இந்தக் கோழைத்தனமான, காட்டு மிராண்டித்தனமான துப்பாக்கிச்சூடு.

ஈழத்தில் முள்ளிவாய்க் காலில் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக்கும் தூத்துக்குடியில் தமிழக அரசு நடத்தியுள்ள இந்தப் படுகொலைக்கும் என்ன வேறுபாடு? காலத்தாலும் மன்னிக்க முடியாத இக்கொடுஞ்செயலுக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலகுவதுதான் தற்போதைக்கு ஆறுதலளிப்பதாக அமையும்.

படுகொலை செய்து விட்டு பின்னர் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதுதான் ஒரு மக்களரசின் அணுகு முறையாகுமா? உயிர் கொடுத்தேனும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் எனப் போராடிப் பலர் களப்பலி ஆகியுள்ள நிலையில், அரசு உடனடியாக அந்த ஆலையை நிலையாக மூடுவதுதான் மக்களுக்கான அரசின் நடவடிக்கையாக அமையும்.

இவ்வளவு கொடூரமான படுகொலைகளுக்குப் பின்னரும் அந்த ஆலை இயங்க அரசு அனுமதிக்குமேயானால், தமிழகத்தில் தன்னியல்பாக மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும். அது காலத்தால் தவிர்க்கமுடியாததாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SterliteProtest #BanSterlite #Thirumavalavan

Tags:    

Similar News