செய்திகள்

தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்: ஜி.கே.வாசன்

Published On 2017-02-09 09:57 IST   |   Update On 2017-02-09 09:57:00 IST
கட்சிக்கும், ஆட்சிக்கும் இடையே நடந்து வரும் வேறுபாடுகளை பார்த்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என புதுக்கோட்டையில் ஜி.கே.வாசன் பேசினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று த.மா.கா. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூறி வந்த நிலையில் தற்போது காலதாமதமாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நீதி விசாரணை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. விசாரணை முடிவில் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம் வெளிச்சத்திற்கு வரும்.

சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டததற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியது அவரது தனிப்பட்ட வி‌ஷயம். ஜெயலலிதாவை நம்பித்தான் தமிழக மக்கள் வாக்களித்தனர்.

தற்போது கட்சிக்கும், ஆட்சிக்கும் இடையே நடந்து வரும் வேறுபாடுகளை பார்த்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகத்தில் உறுதித்தன்மை இல்லாததால் நிர்வாகம் தேங்கி நிற்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை நிரந்தர முதல்வரோ, நிரந்தர கவர்னரோ இல்லாத அவல நிலை தொடர்கிறது. இதற்கு காரணம் பா.ஜ.க. தான்.

அ.தி.மு.க.வின் தற்போதைய குழப்பங்கள் குறித்து த.மா.கா. எந்தவித கருத்தும் கூற விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட தலைவர் கூகூர் சண்முகம், மாநில செயலாளர்கள் லேணா சரவணன், தமிழரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News