செய்திகள்

போராட்டத்தை ஒடுக்க மத்திய- மாநில அரசு சதி: திருமாவளவன் குற்றச்சாட்டு

Published On 2017-01-23 12:38 IST   |   Update On 2017-01-23 12:45:00 IST
போராட்டத்தை ஒடுக்க மத்திய மற்றும் மாநில அரசு செய்த சதி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.
தாம்பரம்:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் படப்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், பொது மக்கள், இளைஞர்களை வன்முறை மூலம் அப்புறப்படுத்துவதை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மக்கள் ஒரே இடத்தில் திரள திட்டமிட்டு உள்நோக்கத்திற்காக அனுமதித்ததே அரசு தான்.

அவ்வாறு அனுமதித்து விட்டு அவர்களை தற்போது கலைந்து செல்லும் படி அச்சுறுத்துவது எந்த விதத்தில் நியாயம். அவசர சட்டத்தை சட்டமாக்குவது மட்டும் அல்லாமல் அந்த சட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று கோரிதான் இந்த போராட்டம் நடந்தது.

மத்திய, மாநில அரசுகள் கூட்டு சேர்ந்து சதி செய்து அவசர சட்டம் என்ற நாடகத்தின் மூலம் இந்த கூட்டத்தை கலைத்து விட்டு பின்னர் தங்களது விருப்பம் போல் முடிவு செய்யலாம் என்பதை நாம் நன்கு அறிய முடிகிறது. ஏனென்றால் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.

அவசர சட்டத்தை மாநில அரசே கொண்டு வரலாம் என்று ஒப்புதல் அளித்தாலும், உச்ச நீதிமன்றத்தில் எந்த நேரத்திலும் இந்த அவசர சட்டத்தை செல்லாததாக ஆக்க முடியும் என்ற நிலை உள்ளது. இருப்பினும் மத்திய, மாநிலஅரசுகள் இந்த அவசர சட்டத்தின் மூலம் போராட்டகளத்தில் உள்ள தமிழ்மக்களின் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்கள் என்பது தான் விடுதலை சிறுத்தை கட்சிகளின் குற்றச்சாட்டு.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேலும் ஒரு நாள் பொருத்திருந்து சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி களைந்து போகச் செய்து இருக்கலாம். வன்முறை, கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி போன்றவற்றால் அப்புறப்படுத்துவது மிகவும் வேதனையை தருகிறது. இதனை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News