செய்திகள்

ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

Published On 2016-11-29 09:29 GMT   |   Update On 2016-11-29 11:22 GMT
ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை 4 வாரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி, சுயேட்சையாக போட்டியிட்ட பிரவீணா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‘சுயேட்சை வேட்பாளரான என்னை பிரசாரம் செய்யவும், பிரசாரத்துக்கு வாகனங்களை பயன்படுத்தவும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பிரசார வாகனத்தை போலீசார் துப்பாக்கி முனையில் பறிமுதல் செய்து விட்டனர்.

இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்கு புகார் செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ள சமஉரிமை இந்த தேர்தலில் எனக்கு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, ஜெயலலிதா வெற்றிப்பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த நவம்பர் 1-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு நோட்டீசு வரவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார்.

இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு மீண்டும் நோட்டீசை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி துரைசாமி, வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு அளிக்க எதிர்மனுதாரர்கள் கால அவகாசம் கேட்டதால், விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News