செய்திகள்
டாக்டர் அன்புமணி ராமதாஸ் இறகு பந்து விளையாடிய காட்சி.

பெண்கள் கொலை செய்யப்படுவதை தடுக்க சட்டம் கொண்டு வரவேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

Published On 2016-09-01 10:09 IST   |   Update On 2016-09-01 13:11:00 IST
ஒரு தலை காதலால் பெண்கள் கொலை செய்யப்படுவதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

தமிழ்நாடு இறகு பந்து சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி ஈரோட்டில் நடந்து வருகிறது.

இந்த போட்டி நடக்கும் இடத்துக்கு தமிழ்நாடு இறகு பந்து சங்க மாநில தலைவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று இரவு வந்தார்.

இறகு பந்து வீரர்-வீராங்கனைகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இதன் பிறகு இரட்டையர் பிரிவில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு விளையாடினார். சுமார் 30 நிமிடம் விளையாடிய அவரை வீரர்- வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்கள் கைதட்டி- ஆரவாரம் செய்தனர்.

இந்த போட்டியில் முதல் போட்டியில் அன்புமணி ராமதாஸ் அணி 18 புள்ளிகள் பெற்றது. அவரை எதிர்த்து விளையாடிய அணி 21 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. அடுத்து நடந்த 2-வது போட்டியில் அன்புமணி ராமதாஸ் அணி21 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.

தமிழ்நாடு இறகு பந்து சங்க மாநில செயலாளர் அருணாசலம், மாவட்ட தலைவர் செல்லையன், செயலாளர் செந்தில்வேலன் ஆகியோர் வெற்றி பெற்ற அன்புமணி ராமதாசுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதன்பிறகு டாக்டர் அன்புமணி ராமராஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டுக்கு காவிரி அணையில் இருந்து ஒரு சொட்டு தண்ணணீர் கூட தரமாட்டோம் என்று 2 கர்நாடகா மந்திரிகள் கூறி உள்ளனர்.

இது வாழ்வாதார பிரச்சனை மட்டும் அல்லாமல் 2 மாநிலங்களுக்கு இடையேயான சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாகும்.

காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் எம்.எல்.ஏக்கள் இது தொடர்பாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

கெயில் பிரச்சனையால் 7 மாவட்டங்களை சேர்ந்த 6 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே விவசாய நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் குழாய்களை பதிக்காமல் நெடுஞ்சாலை வழியாக குழாய்களை பதிக்க வேண்டும்.

சிறுவாணி ஆற்றில் அணை கட்டுவதற்கு கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அணையை கட்ட விட மாட்டோம். சிறுவாணி ஆற்றில் அணை கட்டப்படுவதை கண்டித்து விவசாயிகளை திரட்டி பா.மா.க சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.

ஒரு தலைக்காதலால் பெண்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு மிப்பெரிய வெற்றியை பெறும்.

இவ்வாறுஅவர் கூறினார்.

பேட்டியின்போது பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் ஆறுமுகம், வேலுச்சாமி, துணை தலைவர்கள் பரமசிவம், வடிவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News