செய்திகள்

துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை விரைவில் நிறைவேறும்: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2016-06-23 11:52 IST   |   Update On 2016-06-23 11:52:00 IST
மாநில அரசு ஒத்துழைப்பு தருவதால் துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் நிறைவேறும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

சென்னையில் இருந்து டெல்லி செல்லும் வழியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று காலையில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பாகவும் அவர்களை விடுவிப்பது குறித்தும் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவர் சங்கங்களை கலந்து பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்கு தமிழக அரசு எற்பாடு செய்ய வேண்டும்.

சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே பறக்கும் சாலை அமைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தருகிறது. எனவே இது விரைவில் நிறைவேறும். அதில் சந்தேகம் இல்லை.

வருகிற தமிழக உள்ளாட்சி தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்தனியே போட்டியிட வேண்டும். அப்போதுதான் கட்சியின் உண்மையான பலம் தெரியும்.

காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும், நாங்களும் தனித்து போட்டியிட தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News