பெண்கள் உலகம்
பெண்கள் நிறைய பொய் சொல்வார்களாமே.

பெண்கள் நிறைய பொய் சொல்வார்களாமே.. அப்படியா?

Published On 2022-01-18 03:53 GMT   |   Update On 2022-01-18 03:53 GMT
‘கணவரிடம் நாம் உண்மையை பேசி அவருக்கு விசுவாசமாக இருக்கவேண்டியதில்லை’ என்று கருதியும் சில பெண்கள், கணவரிடம் பொய் பேசுகிறார்கள்.
பொய் சொல்வது மனித இயல்பு. இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. ஆனால் பிரச்சினைகளில் சிக்காமல் இருப்பதற்கு போகிற போக்கில் ஒரு பொய்யை சொல்லிவிட்டுப்போகலாம். அந்த பொய்யால் அடுத்தவர்களுக்கு பாதிப்பும் இல்லாமல் இருக்கவேண்டும். அதே நேரத்தில் தவறுகளை மறைப்பதற்கும், அப்பாவிகளை சிக்கவைப்பதற்கும்தான் பொய் பேசக்கூடாது!

சரி விஷயத்திற்கு வருவோம். ‘பெண்கள் எந்த அளவுக்கு பொய் சொல்வார்கள்?’ என்ற ஆராய்ச்சியில் இங்கிலாந்தை சேர்ந்த மனோதத்துவ ஆய்வாளர் மேரி கோல்டு இறங்கினார். அவரது கண்டுபிடிப்பு ருசிகரமானது. தொடர்ந்து படியுங்கள்!

“திருமணமான பெண்கள் கணவரது மனநிலையை அறிந்துகொண்டு அதற்கு தக்கபடி அவ்வப்போது பொய்களை அவிழ்த்துவிடுகிறார்கள். அவர்கள் குறைந்தது தினமும் இரண்டு பொய் களாவது சொல்கிறார்கள். பொய் சொல்லாத பெண்கள் இருக் கிறார்களா? என்று தேடிப்பிடித்தாலும், அப்படிப்பட்டவர்கள் கிடைப்பது கடினம். கிட்டத்தட்ட எல்லா பெண்களுமே கணவர்களிடம் ஜாலியான மனநிலையில் ஏதாவது ஒரு பொய்யாவது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பெண்கள் எதற்காக பொய் சொல்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் ஆராய்ச்சி செய்தேன். அவர்களது அன்றாட செயல்பாடுகளில் ஏதாவது தவறு நடந்துவிடுகிறது. அது மிக சாதாரணமான விஷயமாக இருக்கும். அதில்கூட உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவதை பல பெண்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

கணவர் மீதான பயமும் பெண்கள் பொய் பேச காரணமாக இருக்கிறது. தான் உண்மையை சொல்லிவிட்டால், தன்னை கணவர் குற்றஞ்சாட்டுவார் அல்லது தண்டனை வழங்கிவிடுவார் என்று பயந்தும் பெண்கள் பொய் சொல்கிறார்கள். இன்னொரு வகையினர் கணவர் மீதான வெறுப்பாலும் உண்மையை மறைத்து பொய் பேசுகிறார்கள். ‘கணவரிடம் நாம் உண்மையை பேசி அவருக்கு விசுவாசமாக இருக்கவேண்டியதில்லை’ என்று கருதியும் சில பெண்கள், கணவரிடம் பொய் பேசுகிறார்கள்.

இதில் கவலைக்குரிய ஒருவகை பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் வஞ்சகமும், சூதும் கலந்து பொய் சொல்வார்கள். இவர்களால்தான் குடும்பத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் உருவாகிவிடும். அப்படிப்பட்டவர்களிடம்தான் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும்” என்று ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.

சின்னச் சின்ன விஷயங்களில் அவர்கள் எப்படி பொய் சொல்வார்கள் என்பதையும் ஆராய்ச்சியாளர் விளக்குகிறார்!

“பெண்கள் காய்கறி வெட்டும்போது கையில் கத்தி லேசாக கீறி யிருக்கும். அதை பற்றி கணவர் கேட்டால், அவரை கவலைப்படுத்தும் விதத்தில் காயத்தை பற்றி பெரிதாக விளக்கமளிப்பார்கள். சில நேரங்களில் அதிகபட்ச காயத்தைகூட ‘அதெல்லாம் ஒண்ணுமில்லேங்க.. கையில் லேசான சிறாய்ப்புதான்’ என்றும் சொல்வார்கள்.

கணவர் வரவு செலவு கணக்கு கேட்டு அழுத்தம் கொடுத்தால், அப்போது அமைதியாக இருந்துவிட்டு சிறிது நேரம் கழித்து அவரிடம் பொய் கலாய்க்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதாவது மனைவியின் ஆடம்பர செலவு பற்றி கடிந்துகொள்ளும் கணவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘என் கறுப்பு கலர் பேண்ட்டை காணவில்லையே.. எங்கே?’ என்று கேட்டால், ‘அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது’ என்று மழுப்பலான பொய்யைச் சொல்வார்கள். ஆனால் அந்தச் சட்டையை அலமாரியில் எடுத்து வைத்திருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும்” என்று சொல்லும் ஆராய்ச்சியாளர், இதில் முத்தாய்ப்பாக சொல்லும் விஷயம்தான் ரொம்ப கவனிக்கத்தகுந்தது.

“பெண்கள், தங்கள் குடும்ப மகிழ்ச்சிக்காகவும், கணவன்- மனைவி உறவை வலுப்படுத்துவதற்காகவுமே நிறைய பொய்களை சொல்கிறார்கள். அதனால் திருமணமான பெண்கள் சொல்லும் பொய்களால் பெரும்பாலும் குடும்பத்திற்கு பாதிப்பு வருவதில்லை” என்கிறார். இது எப்படி இருக்கு?!
Tags:    

Similar News