பெண்கள் உலகம்
தக்க நேரத்தில் உதவக்கூடிய சேமிப்பு - தங்க நகை

தக்க நேரத்தில் உதவக்கூடிய சேமிப்பு - தங்க நகை

Published On 2022-01-04 02:37 GMT   |   Update On 2022-01-04 09:08 GMT
மெல்லியதாகவும் அதிக எடை கொண்டதாகவும் உள்ள தங்க வளையல்களை அடுக்கடுக்காக அணிந்துகொள்வது அழகாக இருக்கும் என்பதால் அந்த மாதிரி நகைகள் வாங்குவது சிறந்த முதலீடாக இருக்கும்.
நாம் நம் பணத்தை பல்வேறு விதங்களில் முதலீடு செய்வது உண்டு. நிலத்தில், வீடுகளில், நிறுவன பங்குகளில், வங்கி வைப்பு நிதிகளில் மற்றும் தங்கத்தில் என்று. இவற்றுள் மிகவும் எளிதாகவும் மனதிற்கு பிடித்ததாகவும், வேண்டும் போது உடனடியாக பணமாக மாற்றிக் கொள்ளக் கூடியதாகவும், அவசர காலத்தில் உதவக் கூடியதாகவும் இருப்பது தங்கநகை முதலீடு என்று கூறலாம்.

இந்தியர்கள் எப்பொழுதுமே தங்கத்தில் முதலீடு செய்வதில் வல்லவர்கள். வேலையின்மை, உடல்நல பிரச்சனை, குடும்பத்தில் சுப நிகழ்வுகள் என்று திடீரென்று பணம் தேவைப்படும் நேரங்களில் நம் கைவசமுள்ள நகைகள் நமக்கு எப்பொழுதுமே ஆபத்பாந்தவனாக உதவுவதே இதற்கு காரணம். இந்திய குடும்பங்களில் பொதுவாக பெண்களே வீட்டு வரவு செலவு கணக்குகளை பார்ப்பார்கள். அப்படி பார்க்கும் பொழுது சேமிக்கும் பழக்கமும் பெரும்பாலான பெண்களிடத்தில் இருக்கும். அப்படி சேமிக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சிறு நகைகளாக வாங்கி சேர்ப்பவர்கள் பலருண்டு.

தங்க நகைகளில் நாம் நம் பணத்தை செலவு செய்யும் பொழுது அந்த நகையை வாங்கிய தினத்தில் இருந்தே நமக்கு பலன் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஒருவரின் அந்தஸ்தை, அவர்களுடைய அழகை பிரதிபலிக்கக்கூடியதாய் தங்கநகைகள் இருப்பதால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கூட நகைகளை விரும்பி அணிகின்றனர். குழந்தைகளுக்கும் கூட பிறந்ததிலிருந்தே நகைகளை அணிவித்து பார்த்து மகிழ்வது பெற்றோர் வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் தங்க நகையில் முதலீடு செய்வது என்பது நமக்கு மிகவும் சுலபமான அதிக நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒரு சிறப்பான முதலீடு ஆகும். நாம் தங்க நகை எனும்பொழுது தங்க நகையாகவோ தங்கக் காசாகவோ வாங்கி வைக்கலாம்.

நெருங்கிய உறவினர்களுக்கு நாம் பரிசளிக்க விரும்பும்போது தங்க நகை, தங்க காசு வாங்கி பரிசளிப்பது அவர்களுக்கு உதவிகரமாய் இருக்கும், மேலும் அந்த நகை அவர்களிடம் நீண்ட காலம் வரை உங்களை நினைவில் வைத்திருக்கவும் செய்யும்.

சேமிப்பாகும் முதலீடாகவும் தங்க நகையை வாங்க விரும்புபவர்கள் கல் பதிக்காத கெட்டி தங்க நகையாக வாங்கி வைக்கலாம். தங்கத்தில் கழுத்தில் செயின்கள் போடும்பொழுது சற்று அதிக எண்ணிக்கையில் அணிந்தாலும் பார்க்க கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கும். அதேபோல் கைகளில் வளையல்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் அணிந்தாலும் கூட பார்க்க பகட்டாக இல்லாமல் கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும்.

எனவே மெல்லியதாகவும் அதிக எடை கொண்டதாகவும் உள்ள தங்க வளையல்களை அடுக்கடுக்காக அணிந்துகொள்வது அழகாக இருக்கும் என்பதால் அந்த மாதிரி நகைகள் வாங்குவது சிறந்த முதலீடாக இருக்கும். மேலும் செயின்களில் கூட கற்களோ முத்து பவழமோ பதிக்காமல் கெட்டி சங்கிலியாக வாங்கி வைத்துக் கொள்வதும் அணிவதற்கு அழகாகவும் தேவையான நேரத்தில் நகையை அடமானம் வைத்து வங்கிகளில் உடனடியாக பணம் பெறலாம். அல்லது விற்று பணமாக்கிக் கொள்ளவும் உதவும். தங்க நகைகளில் வேலைப்பாடுகள் குறைவாக இருக்கும் போது அதன் சேதாரம் குறைவாகவே இருக்கும்.

மேலும், முன்பெல்லாம் தங்க நகைகளை விற்பது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். நகைக்கடைகளில் தங்க நகைக்கு பதிலாக தங்க நகையையே வாங்க வேண்டியிருக்கும். ஆனால் தற்போது பல நிறுவனங்கள் நம் தங்க நகைகளுக்கு உடனடியாக பணம் கொடுக்கின்றன. எனவே ஆபத்து காலத்தில் உடனடியாக பணம் பெறுவதற்கு தங்க நகையில் பணத்தை முதலீடு செய்வது நல்லதே.
Tags:    

Similar News