லைஃப்ஸ்டைல்
புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

Published On 2021-11-20 03:27 GMT   |   Update On 2021-11-20 09:15 GMT
இன்றையச் சூழலில் பெண்கள் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு பரந்து விரிந்திருக்கிறது. புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு இது.
இன்றையச் சூழலில் பெண்கள் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு பரந்து விரிந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பெண் தொழில்முனைவோர்கள் ஆண்களுக்கு இணையாக சாதனைகளை செய்திருக்கிறார்கள். கொரோனா பரவலுக்குப் பிறகு பல பெண்கள் தொழில் முனைவோராக மாறி வருகின்றனர்.

அவ்வாறு புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு இது.

எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் முன் அனுபவம் முக்கியமானது. அல்லது சம்பந்தப்பட்ட தொழில் குறித்த குறுகிய கால பயிற்சியாவது பெற்றிருப்பது நல்லது. செய்யும் தொழில் குறித்த அடிப்படை தகவல்களை தெளிவாக அறிந்திருப்பது அவசியம். ‘முதலீடு போட்டால் மட்டும் போதும், மற்ற விஷயங்களை ஊழியர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற மனநிலை தொழில் வெற்றிக்கு அடிப்படையாக அமையாது.

சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில்கள், உற்பத்தித்துறை, விற்பனை பிரிவு, ஏஜென்சி, மொத்த விற்பனை, சேவைப்பிரிவு உள்ளிட்ட பல தொழில் பிரிவுகள் இருக்கின்றன.

அவற்றிற்கேற்ப தொழில் உரிமம், பணியிடத்திற்கான உள்ளாட்சி அனுமதி, கட்டிட வாடகை ஒப்பந்தம் அல்லது உரிமை பத்திரம், தனிநபர் அல்லது தொழில்கூட்டாளிகள் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகள் முறையாக பெற்ற பின்பே எந்த ஒரு தொழிலிலும் காலடி எடுத்து வைக்கவேண்டும்.

கல்வி என்பது அனைத்துக்கும் அடிப்படை ஆகும். எனவே பெண் தொழில் முனைவோர் குறைந்தபட்ச கல்வியாவது பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் பல சாதனையாளர்கள் ஆரம்ப பள்ளிப்படிப்பே பெறவில்லை என்பது உழைப்பின் அவசியத்தையும், அதன் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது.

அரசு அளிக்கும் பல்வேறு பயிற்சிகளைப் பெற்று, அவற்றை தொழில் முயற்சியாக பெண்கள் மேற்கொள்ளலாம். பயிற்சி பெற்றதற்கான அரசு சான்றிதழ் உள்ள நிலையில் வங்கி கடன், அதற்கான மானியம் உள்ளிட்ட அரசு சலுகைகள் கிடைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்கள் தொழில் தொடங்க சுலபமான கடன் வசதி திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. அதனால் தொழில் தொடங்க விரும்புபவர்கள் அவர்களது திட்ட அறிக்கை, எந்திரங்களுக்கான மதிப்பீடு, தொழில் உரிமம், தொழில் நடக்கும் முகவரி, அனுபவச் சான்றுகள் உள்ளிட்ட தகவல்களை வங்கியில் அளித்து கடன் பெற்று தொழிலைத் தொடங்கலாம்.
Tags:    

Similar News