கிரெடிட் கார்டு உங்களுக்கு கிடைத்தவுடன் அதனை பயன்படுத்த அவசரம் காட்டக்கூடாது. முதலில் அதற்கான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் போன்ற அனைத்தையும் தெளிவாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அதில் சந்தேகம் இருந்தால் அதனை அதன் நிறுவனத்திடம் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். இவ்வாறு விசாரித்து அறிந்து கொள்ளாமல் பின்னர் ஏதாவது அதிக கட்டம் விதிக்கப்பட்டால் இப்படி ஒரு விதிமுறை இருப்பது எனக்கு தெரியாது என்று அவர்களிடம் கூற முடியாது. அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவார்கள். அப்புறம் உங்களது பணம் வீணாகி விடும்.
பில்களுக்கு உரிய தொகை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தி விட வேண்டும். இல்லையென்றால் கூடுதல் வட்டி மட்டுமின்றி அபராதமும் விதிப்பார்கள். ஒரு வேளை ஒரே பில் மிக அதிகமாக இருந்தால் அதனை மொத்தமாக செலுத்துவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். இது போன்ற நேரங்களில் நிறுவனத்தினிடம் பேசி தவணை முறையில் கட்டுவதற்கு அனுமதி கேட்கலாம். அதற்கு ஒரு சிறிய அளவு வட்டி மட்டுமே விதிப்பார்கள்.
கிரெடிட் கார்டுகளுக்கான மாத பில்லை பார்த்து விட்டு குப்பை தொட்டியில் போடும் பழக்கம் இருந்தால் அதை உடனடியாக நிறுத்தி விடுங்கள். அந்த பில்களை தனியாக ஒரு கோப்பில் பாதுகாத்து வைத்திருங்கள். ஏனெனில் அப்போது தான் கணக்கு சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அவற்றை அழித்து விடலாம். இது போன்ற பல்வேறு அம்சங்களை நீங்கள் நினைவில் கொண்டால் கிரெடிட் கார்டு உங்களுக்கு நன்மை தரும். சிலர் மலிவாக கிடைக்கிறதே என்பதற்காக 3, 4 கிரெடிட் கார்டுகளை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு பிரச்சினை தான். எனவே கிரெடிட் கார்டு விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.