லைஃப்ஸ்டைல்
வாழ்க்கைமுறையை மாற்றும் புதுமைப் பெண்கள்

வாழ்க்கைமுறையை மாற்றும் புதுமைப் பெண்கள்

Published On 2020-09-14 05:11 GMT   |   Update On 2020-09-14 05:11 GMT
60 வயதுக்கு மேல் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது என்று கருதும் பெண்கள் 40 வயதிலே வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் வழிமுறைகள் பற்றி சிந்திக்கிறார்கள்.
இளந்தலைமுறையினரிடம் புதிய சிந்தனைத்தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. அது சமூகத்தில் புத்துணர்ச்சியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக 25 வயதில் இருந்து 30 வயதுக்குள் வேலையில் சேர்ந்தால், 60 வயது வரை தொடர்ச்சியாக உழைப்பார்கள். பணியில் இருக்கும் காலகட்டத்தில் பலருக்கும் ஊரும், உறவுகளும் நினைவில் இருப்ப தில்லை. வேலை- பணம் என்ற இரண்டு எல்லைக்கோட்டிற்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள் எப்பாடுபட்டாவது சொத்துபத்துகளை வாங்கி சேர்ப்பார்கள். வங்கி கணக்கிலும் பணம் ஏறிக்கொண்டிருக்கும். சரியாக ஓய்வுகூட எடுக்கமாட்டார்கள். நேரத்துக்கு சுவையாக சாப்பிடவும் மாட்டார்கள்.

அப்போது நெருக்கமானவர்கள் அவர்களிடம் ‘இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைக்கிறாயே.. நல்லா சாப்பிட்டால் என்ன.. நாலு இடத்துக்குபோய் சொந்தபந்தங்களை பார்த்தால் என்ன..’ என்று கேட்டால், அதற்கு பதிலாக ‘அறுபது வயது வரை உழைக்கவேண்டும். எவ்வளவு பணத்தை சேர்க்க முடியுமோ அவ்வளவையும் சேர்த்துவிடவேண்டும். அதன் பின்பு நன்றாக உட்கார்ந்து சாப்பிடுவேன். நான்கு இடங்களை சுற்றிபார்ப்பேன். சொந்த பந்தங்களை எல்லாம் தேடிப்போய் சந்திப்பேன். எல்லாம் 60 வயதுக்கு பிறகுதான்”என்பார்கள்.

ஆனால் அறுபது வயதில் அவர்கள் ஓய்வுபெறும்போது நாடிநரம்பெல்லாம் தளர்ந்துபோகும். உடலில் பல நோய்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். விரும்பியதை சாப்பிடமுடியாது. விரும்பிய இடங்களுக்கு செல்ல உடல் ஒத்துழைக்காது. பணம் மட்டுமே இருக்கும். உடல் நலம் உள்பட மீதி அனைத்தையும் இழந்திருப்பார்கள். 60 வயது வரை வீடு-அலுவலகம் என்று ஓடிக்கொண்டிருந்த அவர்கள், அதற்கு பிறகு வீடு-மருத்துவமனை என்ற இரண்டிற்கும் இடையே இயங்கிக்கொண்டிருப்பார்கள்.

இந்த வாழ்க்கை முறை இன்றைய இளந்தலைமுறையினருக்கு பிடிக்கவில்லை. 60 வயதுக்கு மேல் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது என்று கருதும் அவர்கள் 40 வயதிலே வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் வழிமுறைகள் பற்றி சிந்திக்கிறார்கள். 25 வயதுக்குள் வேலையில் சேர்ந்துவிட வேண்டும். கடுமையாக உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும். 35 வயதில் இருந்து 40 வயதுக்குள் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, வாழ்க்கையை புதிய பாதையில் திருப்பிவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதாவது ஆரோக்கியமாக இருக்கும் காலகட்டத்திலே வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புகிறார்கள். 40 வயதுகளில் வேலைக்கும், வேலைதரும் மனஅழுத்தத்திற்கும், வேலை பரபரப்பிற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எந்த சுமையும் இல்லாமல் விரும்பியதை செய்ய திட்டமிடுகிறார்கள். விவசாயம் செய்வது, ஊர் சுற்றுவது, புதிதாக ஏதாவது தொழில் தொடங்குவது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது என்று புதிய திசையை நோக்கி பயணிக்க விரும்புகிறார்கள். இந்த சிந்தனை செயல்திட்டத்திற்கு ‘பினான்சியல் இன்டிபென்டன்ட், ரிட்டயர் ஏர்லி’ (எப்.ஐ.ஆர்.ஈ) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த திட்டத்திற்கு தக்கபடி வாழ்வதற்காக இன்றைய இளையதலைமுறையினர் 25 வயதுகளிலே கடுமையாக உழைக்கத்தொடங்கிவிடுகிறார்கள். கண்டபடி பணத்தை செலவிடாமல் எளிமையாக வாழ்ந்து, பணத்தை சேமிக்கும் வழிமுறைகளையும் கையாளுகிறார்கள்.

இது பற்றி 26 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் நமிதா கூறுகிறார்:

“எனக்கும் சில லட்சியங்கள் இருக்கின்றன. இளம் வயதிலே நிறைய சம்பாதித்துவிடவேண்டும். 40 வயதிற்குள் வேலையில் இருந்து விலகி புதிய ஆடைவடிவமைப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கவேண்டும். மேலும் சில தனிப்பட்ட ஆசைகளும் இருக்கின்றன. அவைகளுக்காக எனக்கு 80 லட்சம் ரூபாய் தேவைப்படும். பத்தாண்டுகளில் நான் அதை சம்பாதிக்கவேண்டும். இப்போது நான் 80 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பாதிக்கிறேன். அதில் 50 ஆயிரத்தை சேமிக்கிறேன். இன்னும் ஐந்தாண்டுகள் ஆனதும் நான் என் எதிர்கால திட்டங்களுக்கு உயிர்கொடுக்கத் தொடங்கிவிடுவேன்” என்கிறார்.
Tags:    

Similar News