லைஃப்ஸ்டைல்
பெண்களுக்கு கொரோனா கொடுத்த வேலை

பெண்களுக்கு கொரோனா கொடுத்த வேலை

Published On 2020-09-07 04:32 GMT   |   Update On 2020-09-07 04:32 GMT
வீட்டில் இருந்து வேலை செய்வது தவிர்க்கமுடியாத நிலையில் பல நிறுவனங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி இருக்கின்றன.
கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடி காரணமாக, வீடுகளில் இருந்தே வேலை பார்க்க வேண்டிய சூழல் தவிர்க்கமுடியாததாகி விட்டது. ஐ.டி.துறை நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் பெரும்பாலானோரை வீடுகளில் இருந்தே பணி செய்வதற்கு அனுமதித்து இருக்கின்றன. இந்த சூழலில் வீடுகளில் இருந்தே வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் வீட்டில் இருந்து பணி செய்யும் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்திருப்பதும், ஏராளமான பெண்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. டெல்லி, பெங்களூரு, சென்னை, மும்பை, ஐதராபாத், புனே உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.

இது குறித்து பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் ஒன்றின் தலைவர் நேகா கூறுகையில், “வீட்டில் இருந்து வேலை செய்வது புதிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இது பெண்களுக்கு சாதகமான அம்சமாகவே இருக்கிறது. தங்கள் தொழில் வாழ்க்கையை தொடங்குவதற்கு நிறைய பெண்களுக்கு இந்த காலகட்டம் வழிவகை செய்திருக்கிறது. திருமணம் காரணமாகவோ, குழந்தை பிறப்புக்கு பிறகோ, குடும்ப சூழல் காரணமாகவோ வேலையை கைவிட்ட பெண்கள் மீண்டும் வேலைவாய்ப்பை பெறும் எண்ணிக்கையும் ஆச்சரியப்படும் வகையில் உயர்ந்திருக்கிறது” என்கிறார்.

வீட்டில் இருந்து வேலை செய்வது தவிர்க்கமுடியாத நிலையில் பல நிறுவனங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி இருக்கின்றன. கல்வி, ஐ.டி. துறை, இணைய தளம், ஆன்லைன் தொழில் தளமான இ-காமர்ஸ், டெலி காலிங், வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட துறைகளில் பெண் தொழில் வல்லுனர்களுக்கு வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. கடந்த ஆண்டை ஒப் பிடும்போது வேலை தேடுபவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழல் பெண்களுக்கு சாதகமாகவும் இருக்கும் என்பதும் பல நிறுவனங்களின் கருத்தாக இருக்கிறது.
Tags:    

Similar News