லைஃப்ஸ்டைல்

வீட்டு கடனை செலுத்திய பின்பு கவனிக்க வேண்டியவை

Published On 2016-08-20 02:18 GMT   |   Update On 2016-08-20 02:18 GMT
வங்கி கடன் திருப்பி செலுத்தப்பட்ட பின்பும் நாம் கவனிக்க வேண்டிய சில நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பற்றி முதலீட்டு ஆலோசகர்கள் தரும் குறிப்புகளை இங்கே காணலாம்.
பல்வேறு சிரமங்களுக்கு இடையில் வீட்டு கடன் பெற்று அதை குறிப்பிட்ட கால அளவுக்குள் வங்கிக்கு திருப்பி செலுத்தி விடுவது வழக்கமான முறையாகும். சில சந்தர்ப்பங்களில் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்கு முன்பாக ‘போர்குளோஸர்’ முறையிலும் கடனை திருப்பி செலுத்துவது உண்டு.

கடனை திருப்பி செலுத்தி விட்டு பத்திரங்களை வங்கியிலிருந்து பெற்று, வீட்டில் பாதுகாப்பாக வைப்பதோடு வேலை முடிந்தது என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் வங்கி கடன் திருப்பி செலுத்தப்பட்ட பின்பும் நாம் கவனிக்க வேண்டிய சில நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பற்றி முதலீட்டு ஆலோசகர்கள் தரும் குறிப்புகளை இங்கே காணலாம்.

1. வீட்டு கடனுக்கான தவணைகள் முழுவதும் செலுத்தப்பட்ட பிறகு வங்கியிடமிருந்து, வீட்டின் மீதான ‘பிணை உரிமை’ நீக்கப்பட்டதற்கான ஆவணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சில நாட்கள் தாமதமானாலும் வங்கிகள் வரச்சொல்லும் நாட்களில் சென்று பெற்றுகொள்வது முக்கியம்.

2. என்.ஓ.சி எனப்படும் தடையில்லா சான்றையும் வங்கியிடமிருந்து பெறுவது அவசியம். அதில் கடன் பெற்றவர் பெயர் மற்றும் வங்கி கடன் எண் ஆகிய தகவல்களோடு, தவணைகள் முறையாக செலுத்தப்பட்டு விட்டது என்ற தகவலும் அடங்கி இருக்கும்.

3. வீட்டுக்கான ‘ஒரிஜினல்’ பத்திரங்களை வங்கி திருப்பி தரும்போது அவற்றில் அனைத்து ஆவணங்களும் நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆவணங்களின் பக்கங்கள் ஏதும் விடுபட்டிருக்கிறதா..? என்பதையும் சரி பார்ப்பது முக்கியம்.

4. ‘சிபில் ரிப்போர்ட்’ எனப்படும் கடன் பெறுவதற்கான தர நிர்ணய தகவல்கள் வங்கிகளுக்கிடையில் இருக்கும் நடைமுறையாகும். கடன் திருப்பி செலுத்திய பிறகு ஓரிரு மாதங்களில் அதன் விபரங்கள் ‘சிபில்’ அமைப்பில் ‘அப்டேட்’ ஆகியிருப்பதை கவனித்துக்கொள்ள வேண்டும். வேறொரு கடன் பெற முயற்சி செய்யும்போது அந்த தகவல் அவசியமான ஒன்றாக இருக்கும். ‘ சிபில் ரிப்போர்ட்டில்’ நமது விபரங்கள் ‘அப்டேட்’ ஆகவில்லை எனும் பட்சத்தில் வங்கியிடம் தகவல் தெரிவிக்கலாம்.

5. கடனை செலுத்தி முடித்து பத்திரங்களை வாங்கிய பிறகு அதற்கான வில்லங்க சான்றையும் பெற்றுக்கொள்வது மிக முக்கியமானது. ‘வங்கியின் பிணை உரிமை நீக்கம்’ பற்றிய தகவல்கள் அதில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

6. வங்கி கடன் செலுத்தப்பட்ட பிறகும் வங்கிக்கும், கடன் பெற்றவருக்கும் இடையில் சுமுகமான போக்கு இருப்பது எதிர்கால நலன்களுக்கு உகந்தது என்று முதலீட்டு ஆலோசகர்கள் சொல்வதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

Similar News