லைஃப்ஸ்டைல்

தாய்மைக் கனவுகளை நனவாக்கும் மகத்தான விஞ்ஞானம்

Published On 2019-03-08 03:36 GMT   |   Update On 2019-03-08 03:36 GMT
பெண்களுக்கு இந்த மகளிர் தின அறிவுரை என்னவென்றால் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கரு உருவாகவில்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும்.
குடும்பம் என்பது குழந்தைகள் இருந்தால்தான் முழுமை அடைகிறது. குழந்தையின்மையினால் மனவருத்தம், திருமண வாழ்க்கையில் கசப்பு, கடினமான சொல்லை கேட்க வேண்டிய நிலைமை, திருமணங்கள் முறிவு அடைதல் ஆகிய பல இன்னல்கள் ஏற்படுகிறது. ஆனால் இன்றைய நிலைமை மிகவும் வித்தியாசமானது. விஞ்ஞானம் பல மடங்கு முன்னேறி இருக்கிறது. இன்றைக்கு குழந்தையின்மைக்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து அந்த குறைக்கு தேவையான சிகிச்சையை செய்கிறார்கள்.

ஸ்கேனில் 3 D, 4D பாப்லர் (இரத்த ஓட்டம் பார்ப்பது) ஆகியன நவீன வசதிகள் உள்ளன. இதனால் கர்ப்பப்பையில், சினைப்பையில், கருக்குழாயில் உள்ள குறைகளை கண்டுபிடித்து அதற்குரிய சிகிச்சையை அளிக்கலாம். ஹிஸ்ட்ரோ சால்பின் ஜோக்ராம் (Hystero Salphingogram) என்னும் எக்ஸ்-ரே எடுத்து குழந்தை வளரும் இடத்தில் உள்ள குறைபாடுகள், கருக்குழாயில் உள்ள அடைப்புகள், நீர்கோர்த்தல் ஆகியவைகளை கண்டுபிடிக்கலாம். ஆண்களுக்கு கணினி மூலம் விந்து ஆராய்தல் என்னும் முறை மரபணுவில் உள்ள குறைபாடுகளையும் கண்டுபிடிக்கலாம்.

நுட்பமான முறையில் விந்தின் குறைகளை கண்டுபிடித்து அதற்கான சிசிச்சையை அளித்தால் வெற்றி அடையலாம். ஆண்கள் வயது அதிகரிக்கும் பட்சத்தில் இத்தகைய குறைபாடுகள் அதிகரிக்கிறது. மருந்துகள் மூலமும் லேப்ரோஸ் கோப்பிக் அறுவை சிகிச்சைகள் மூலமும் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்யலாம். கர்ப்பப்பையிலும், சினைப்பையிலும், கருக்குழாயிலும் ஏற்படும் நார் கட்டிகள், நீர்கட்டிகள், இரத்தக் கட்டிகள், நீர் கோர்த்தல் போன்றவைகளை 3-D லேப்ரோஸ்கோபி, ஹிஸ்ட்ரோஸ் கோப்பி மூலம் சிகிச்சையளித்து முழுமையாக குணப்படுத்தலாம்.

3D லேப்ரோஸ்கோபி மூலம் மிக நுட்பமாக அறுவை சிகிச்சை செய்வதால் இரத்தக் கசிவு குறைவாக உள்ளது. கட்டிகளை எடுத்த பின் தையல் போட்டு அதை நிலமைக்கு எடுத்து வருவதால், கர்ப்பம் அடையும் வாய்ப்பும் கர்ப்பத்தில் எந்த விதமான சிக்கல்களும் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் உபயோகமாக இருக்கிறது. 3D விஞ்ஞானத்தின் மகிமை இது என்று கூறலாம்.

நவீன அறுவை சிகிச்சை முறைகளை கடைப்பிடிப்பதால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் 90 சதவிகித பேருக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அளிக்க முடியும்.

மீதியுள்ள 10% பெண்களுக்கு IUI - கருப்பையில் விந்து செலுத்துதல் அல்லது டெஸ்ட்டியூப் பேபி (IVF/ICSI) விந்தை முட்டையில் செலுத்தும் முறை தேவைப்படுகிறது. IUI ஆறுமுறை தோல்வி அடைந்தால் ICSI முறைக்கு மாறுவது நல்ல பயனை அளிக்கும்.

IVF லேப்பில் ஹ்யுமிடிக்ரிப் என்னும் கருவி முட்டையையும், கருவையும் நம் உடம்பில் இருக்கும் வெப்ப நிலையிலேயும், ஆகிசிஜென் போன்ற வாயுக்களையும் நம் உடம்பில் இருக்கும் நிலையிலேயும் வைக்க உதவுவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இதை தவிர லேசர் கணினி முறையை உபயோகிப்பதால் 38 வயது தாண்டியவர்களுக்கும் பலமுறை தோல்வி அடைந்தவர்களுக்கும் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 5-வது நாள் கருவை (பிளாஸ்போசிஸ்ட்) கர்ப்பப்பையில் செலுத்துவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. வெற்றி அடையும் வாய்ப்பை அதிகரிக்க முட்டை, விந்து, கர்ப்பப்பை இவை மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும். முட்டை வளர்ச்சியையும் அதன் தன்மையும் முதல் தரமாக ஆக்குவதற்கு சிறப்பு மருந்துகளும் யோகா, அக்குபஞ்சர், இசை ஆகியவையும் மிக உபயோகமாக உள்ளன.

பெண்களுக்கு இந்த மகளிர் தின அறிவுரை என்னவென்றால் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கரு உருவாகவில்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாக மாதவிடாய் தாமதமாக இருந்தாலும், மிகவும் வலியோடு இருந்தாலும் தாம்பத்தியத்தில் சிக்கல் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும், சிகிச்சை ஆரம்பித்து விட்டால் அடுத்தடுத்து இடைவிடாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். முக்கியமாக 35 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் விரைவாக சிகிச்சை தொடங்குவது நல்லது.
Tags:    

Similar News