லைஃப்ஸ்டைல்

தூக்கம் வராமல் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு டிப்ஸ்

Published On 2016-07-30 07:47 GMT   |   Update On 2016-07-30 07:47 GMT
கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் இருந்தால் தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது.
கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். வயிறானது பெரியதாக மாறும் போது, எந்த பக்கமும் திரும்பி தூங்க முடியாது, மேலும் அடிக்கடி சிறுநீர் வருவது, மனநிலை மாற்றம், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவது, தசைப்பிடிப்புகள் போன்றவையும் ஒருவித காரணங்களாகும்.

ஆனால் கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் இருந்தால் தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது.

பொதுவாக முதல் மூன்று மாதத்தில் அதிகப்படியான சோர்வு இருப்பதால், பகல் நேரத்தில் தூங்க தோன்றும். அப்படி பகலில் தூங்கினால், இரவில் தூக்கத்தை தொலைக்க நேரிடும். ஆகவே பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

கர்ப்பமாக இருக்கும் போது, தூங்குவதற்கு நல்ல மென்மையான மற்றும் முதுகிற்கு உறுதுணையாக இருக்குமாறு 2 மூன்று தலையணைகளை வாங்கி தூங்குவதற்கு பயன்படுத்த வேண்டும். இதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

மன அழுத்தம் அல்லது மன நிலையில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். இது முற்றினால் தூக்கமின்மை ஏற்படக்கூடும். ஆகவே மன நிலையில் ஏற்படும் மாற்றங்களுள் ஒன்றான மன அழுத்தத்தை சந்திக்கும் போது, அதனைக் குறைக்கும் வண்ணம் யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால், நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இதனால் நல்ல தூக்கமும் வரும்.

தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடித்தால், நல்ல தூக்கம் கிடைக்கும். அதுமட்டுமின்றி கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களாக பிரட் மற்றும் புரோட்டீன் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொண்டால் தலை வலி, வெப்ப உணர்வு, கெட்ட கனவு போன்றவையும் அகலும். நல்ல தூக்கமும் வரும்.

குழந்தையும், தாயும் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் மற்றும் நீர்ம பானங்கள் அவசியம் தான். ஆனால் அத்தகைய பானங்களை பகல் வேளையில் அதிக அளவில் குடிக்க வேண்டும். மாலை வந்தால் அவற்றின் அளவைக் குறைத்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் வருவதைத் தவிர்க்கலாம். இதனால் இரவில் தூக்கம் தடைபடாது.

கர்ப்பிணிகளுக்கு தசைப்பிடிப்புக்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனாலேயே பலர் தூக்கத்தை தொலைக்கின்றனர். ஆகவே பகல் வேளையில் கால்களுக்கு சுடுநீர் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

மேலும் இரவில் படுக்கும் முன், வெதுவெதுப்பான நீரில் குளித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும்.வெதுவெதுப்பான நீரானது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து தசைப்பிடிப்புக்கள் ஏற்படாமல் தடுக்கும். எனவே நல்ல தூக்கம் வேண்டுமானால், வெதுவெதுப்பான நீர் குளியலை மேற்கொள்ளுங்கள்.

Similar News