பெண்கள் உலகம்

சமையலறை பாதுகாப்பு வழிமுறைகள்

Published On 2022-07-04 04:29 GMT   |   Update On 2022-07-04 04:29 GMT
  • பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக் கூடாது.
  • சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு சமைக்கக் கூடாது.

வீட்டில் பெண்கள் அதிகமாக நேரத்தை செலவிடும் இடம் சமையலறை. பரபரப்பாக சமையல் செய்வது, மற்ற வேலைகளை முடித்த களைப்போடு சமையல் வேலைகளில் ஈடுபடுவது என அவர்கள் மேற்கொள்ளும் வேலைக்கு ஏற்றவாறு, அந்த அறையின் அமைப்பு மற்றும் வசதிகள் இருக்க வேண்டும். தண்ணீர், மின்சாரம், நெருப்பு இவை மூன்றையும் ஒன்றாக பயன்படுத்தும் இடம் என்பதால், சமையல் அறையில் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

தரை:

பெரும்பாலான வீடுகளில் 'டைல்ஸ்' பதிக்கப்பட்ட தரை உள்ளது. இதில், எந்த வகையான திரவங்கள் சிந்தினாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எதிர்பாராமல், அதில் கால் வைக்க நேர்ந்தால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே, கீழே சிந்தும் திரவங்களை அவ்வப்போது துடைத்து, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி பாட்டில்கள் ஏதேனும் உடைந்தால், அதைத் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

தீ அணைக்கும் கருவி:

சமையல் அறையில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், பர்னர்கள் அல்லது பிளம்பீட் டெசர்ட் ஆகியவற்றில் இருந்து தீப்பிழம்புகள் வந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சமைக்கும் பாத்திரத்தில் திடீரென தீப்பற்ற நேர்ந்தால், அதில் தண்ணீர் ஊற்றக் கூடாது. இது தீயை மேலும் அதிகரிக்கக்கூடும். பாத்திரத்தை ஒரு தட்டை போட்டு மூடி, அதன் மீது சிறிது பேக்கிங் சோடாவைப் போடலாம். இதனால், தீ உடனடியாக கட்டுக்குள் வரும். சமையல் அறையில், தீயணைக்கும் கருவியை வைத்திருப்பதும், அதைக் கையாளத் தெரிந்திருப்பதும் அவசியம்.

சமையல் உபகரணங்கள்:

கத்தி, அரிவாள், அரிவாள்மனை போன்ற கூர்மையான பொருட்களை சமையல் அறையின் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். பாத்திரங்களில் திருகுகள் உள்ள கைப்பிடிகள் தளர்வாக இருப்பதைக் கவனித்து உடனே அவற்றை சரி செய்வதன் மூலம், விபத்துகளைத் தவிர்க்கலாம்.

தினசரி கவனம்:

தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலியவற்றை நன்றாக சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியில் உள்ள சேப்டி வால்வையும் சரிபார்ப்பது அவசியம். அடுப்பை அணைப்பதோடு, எரிவாயு சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும். குழம்பு தாளிக்கும் போது, குமிழ் வைத்த மூடியால் மூடியபடி தாளித்தால், கடுகு போன்ற பொருட்கள் தெறித்து விழுந்து சூடுபடாமல் இருக்கும். சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு சமைக்கக் கூடாது. இது எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது.

மேலும், குழந்தைகள் அடுப்பிற்கு அருகில் சென்று கேஸ் குழாய்களை திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக் கூடாது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு ரெகுலேட்டரும், அடுப்பின் வால்வும் மூடி உள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம். பாத்திர அலமாரிகளோ, மற்ற பொருட்களோ அடுப்பிற்கு மேல் பகுதியில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை எடுக்க முயலும் போது, ஆடையில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. ஆடையில் நெருப்பு பற்றினால், உடனே உடலைச் சுற்றி கம்பளியை போர்த்தி, நெருப்பை அணைக்கலாம்.

Tags:    

Similar News