பெண்கள் உலகம்

உடல்-மன நலனை காக்கும் `அரவணைப்பு'

Published On 2024-01-28 09:31 GMT   |   Update On 2024-01-28 09:31 GMT
  • இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும்.
  • நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவசியமான அன்பு, பாசம், பச்சாதாபம், புரிதல் போன்ற உணர்ச்சிகளை கட்டிப்பிடித்தல் மூலம் வெளிப்படுத்த முடியும். இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஏன் கட்டிப்பிடிப்பது முக்கியம் என்பது பற்றி பார்ப்போம்.

உடல் நலம்

வலி நிவாரணம்:

உடல் ரீதியான தொடுதல், மசாஜ் அல்லது எளிய அரவணைப்பு போன்றவை இயற்கை வலி நிவாரணிகளான எண்டோர்பின்களின்வெளியீட்டை தூண்டும். வலியின் உணர்வை குறைக்கவும், அசவுகரியத்தை போக்கவும் உதவும்.

நோய் எதிர்ப்பு:

கட்டிப்பிடிப்பது போன்ற நேர்மறையான உடல் தொடர்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கட்டிப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதும், ஆக்சிடாசின் வெளிப்படுவதும் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதய ஆரோக்கியம்:

உடல் தொடுதல், குறிப்பாக கட்டிப்பிடித்தல் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு குறைவதற்கு வழிவகுக்கும். கட்டிப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்வது காலப்போக்கில் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும்.

மன நலம்

மனநிலை மேம்பாடு:

கட்டிப்பிடிப்பது உட்பட உடல் ரீதியான தொடுதல் எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். அதன் மூலம் மனநிலையை மேம்படுத்தி மகிழ்ச்சிக்கு வித்திடும். உணர்வுகளை சீராக கடத்துவதற்கு வழிவகை செய்யும். இயற்கையாகவே மன நிலையை மேம்படுத்துவதில் அரவணைப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

கவலை-மனச்சோர்வு:

கட்டிப்பிடித்தல் போன்ற உடல் ரீதியான தொடுதல் ஆறுதலையும், உணர்ச்சிப்பூர்வமான ஆதரவையும் அளிக்கும். கவலை மற்றும் மனச்சோர்வுக்கான அறிகுறிகளை குறைப்பதற்கும் வழிவகுக்கும். பாதுகாப்பு உணர்வையும் தரும்.

மன அழுத்தம்:

தொடுதல் ஆக்சிடாசின் வெளியீட்டை தூண்டி மன அழுத்ததிற்கு காரணமான கார்டிசோலின் அளவை குறைக்கும். அதனால் மன அழுத்தம் குறையும். நாள்பட்ட மன அழுத்தத்தில் இருந்தால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். கட்டிப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை குறைப்பது நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்யும். மன அழுத்த மேலாண்மையை நிர்வகிக்கும் கருவியாக செயல்படும். அன்றாட வாழ்வின் சவால்களை சமாளிப்பதற்கும் வழிவகுக்கும்.

உணர்ச்சி:

கட்டிப்பிடித்தல் என்பது வாய்மொழி அல்லாத சக்தி வாய்ந்த தொடர்பு வழிமுறையாகும். உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவசியமான அன்பு, பாசம், பச்சாதாபம், புரிதல் போன்ற உணர்ச்சிகளை கட்டிப்பிடித்தல் மூலம் வெளிப்படுத்த முடியும். இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தவிர செல்லப்பிராணிகளை கட்டிப்பிடிக்கவும் மறவாதீர்கள். தன்னைத்தானே கட்டிப்பிடிப்பதும் கூட சிறப்பானதுதான். மூச்சை ஆழமாக உள் இழுத்தவாறு இரு கைகளையும் தோள்பட்டைகளில் அழுத்தி தழுவி அரவணையுங்கள். சுய இரக்கத்துடனும், சுய அன்புடனும் கைகளை தழுவுவது இனிமையான உணர்வுகளை வெளிப்படுத்தும்.

அன்பு, பாசம், இன்பம், துக்கம் என அத்தனை வகை உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் சக்தி வாய்ந்த பிணைப்பாக அரவணைப்பு அமைந்திருக்கிறது. கட்டிப்பிடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிப்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. கட்டிப்பிடிப்பது ஆக்சிடாசின் ஹார்மோன் வெளியீட்டை தூண்டச் செய்யும். இது காதல் ஹார்மோன், பிணைப்பு ஹார்மோன் என்று குறிப்பிடப்படுகிறது.

கட்டிப்பிடிக்கும் நபரிடத்தில் நம்பிக்கை, பச்சாதாபம், இணக்கம் போன்ற உணர்வுகளை ஊக்குவிக்கும். மன அழுத்தத்தைக் குறைப்பதில்இருந்து உணர்ச்சி ரீதியான தொடர்பை மேம்படுத்துவது வரை கட்டிப்பிடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.

Tags:    

Similar News