லைஃப்ஸ்டைல்
வாழைப்பழ மாஸ்க்

கூந்தலுக்கு வாழைப்பழ மாஸ்க் போடுங்க.. அப்புறம் பாருங்க உங்கள் கூந்தல் எப்படி இருக்குனு....

Published On 2020-05-27 04:46 GMT   |   Update On 2020-05-27 04:46 GMT
வாழைப்பழமும் எண்ணற்ற சத்துகளால் நிறைந்திருக்கிறது. வாழைப்பழ மாஸ்க் கூந்தலின் வளர்ச்சியை மட்டும் அல்லாமல் பளபளப்பாக்கவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.
முகத்துக்கு பயன்படுத்துவது போன்று கூந்தலுக்கும் ஹேர் மாஸ்க் உண்டு. கூந்தல் பிரச்சனைக்கேற்ப அதற்கு தீர்வு தரும் பொருள்களை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும். குறிப்பாக இயற்கை பொருள்களை பயன்படுத்தினால் பலன் கூடுதலாக கிடைக்கும். அந்த வகையில் கூந்தல் கட்டுகடங்காமல் வறண்டு இருந்தால் நீங்கள் வாழைப்பழ பேக்கை தேர்வு செய்யலாம். இவை கூந்தலுக்கு உடனடியாக போஷாக்கும் ஊட்டச்சத்தும் கொடுக்கும். ஒரு முறை பயன்படுத்தினாலே பலன் உடனடியாக தெரியும்.

கூந்தல் பேக் தயாரிக்க தேவையானவை

நன்றாக பழுத்த வாழைப்பழம் - 1
தயிர் - 1 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பால் - 1 மேசைக்கரண்டி
சுத்தமான ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
கற்றாழை சாறு - தேவைக்கு

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி நன்றாக மசிக்கவும். கைகளால் மசித்தாலும் போதும் பிறகு இதில் கெட்டித்தயிர், தேங்காய்ப்பால் ( முதல் முறை பிழிந்து எடுக்கப்பட்ட பால்) ஆலிவ் எண்ணெய், கற்றாழை சாறு அனைத்தையும் சேர்த்து அகலமான பாத்திரத்தில் போட்டு மத்து கொண்டு நன்றாக கடையவும். அல்லது மிக்ஸியில் சேர்த்து அடிக்கவும் செய்யலாம். இவை அனைத்தும் சேர்ந்து க்ரீம் பதத்துக்கு வரும். இவை அதிகளவு நீர்த்து போகாமல் இருக்கும்படி பார்த்துகொள்வது அவசியம்.

இந்த பேக்கை கூந்தலுக்கு பயன்படுத்தும் போது கூந்தல் அழுக்கில்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். அழுக்கு இருந்தால் பேக் சரியாக கூந்தலில் பிடிக்காது. இப்போது பேக் போடலாம். பிறகு முடியை பாகங்களாக பிரித்து ஸ்கால்ப் பகுதியிலும் தலைபகுதியிலும் ஹேர் பிரஷ் கொண்டு நிதானமாக தடவ வேண்டும். முடியின் வேர்ப்பகுதி வரை அனைத்து இடங்களிலும் நன்றாக தடவவேண்டும். இவை குளுமையை உண்டாக்காது என்பதால் 40 நிமிடங்கள் வரை தலையில் ஊறவிடலாம்.

பிறகு தலையில் நீர் தெளித்து அந்த க்ரீம் போக கசக்கி அதன் பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் ( அதிக கெமிக்கல் இல்லாத) பயன்படுத்தி கூந்தலை அலசி எடுங்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் இப்படி செய்துவந்தால் கூந்தல் மென்மையாகும். கட்டுக்குள் வரும் பளபளப்பும் கூடும்.

முடி உயிரூட்டம் பெறுவதால் கூந்தல் உதிர்வு நிற்கும். அடர்த்தி அதிகரிக்கும். முடி வலுவாகவும் இருக்கும். கூடுதலாக இதில் தயிர் சேர்ப்பதால் கூந்தலில் பொடுகு பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடும். தேங்காய்ப்பால் கூந்தலுக்கு தனி பொலிவையும் மினுமினுப்பையும் தரக்கூடியது. இதை எதுவுமே இல்லாமல் தனியாகவே பயன்படுத்தலாம். இயற்கை தந்த கண்டிஷனராகவே இவை பயன்படும். வறண்ட கூந்தலுக்கும், கூந்தல் நுனி பிளவுபடுதலுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருந்தால் அந்த ஊட்டச்சத்தை தேங்காய்ப்பால் தந்துவிடும். இதையும் சேர்த்திருப்பதால் கூந்தலின் வறட்சியை மீட்டுவிடலாம். 
Tags:    

Similar News