லைஃப்ஸ்டைல்
குழந்தைகளின் பேன் தொல்லை நீங்க ஆயுர்வேத மருத்துவம்...

குழந்தைகளின் பேன் தொல்லை நீங்க ஆயுர்வேத மருத்துவம்...

Published On 2020-05-05 03:51 GMT   |   Update On 2020-05-05 03:51 GMT
பள்ளிக்கு செல்லும் சிறுமிகளிடம் இது அதிகமாக பரவும். பேன் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தால், நமக்கும் பேன் வரும் வாய்ப்பு அதிகம்.
பேன் தலையில் உருவாகும் ஒரு சிறிய பூச்சி. இது தலையிலும், முடி இருக்கும் கண் புருவத்திலும், கண் இமையிலும்கூட வரலாம். நெருக்கமான தொடர்பு மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது பரவும். இதனுடைய சிறிய முட்டை பார்ப்பதற்கு பொடுகு போல இருக்கும். இதனுடைய முட்டை இரண்டு வாரங்களுக்கு உயிர் வாழும். பேன் 30 நாட்கள் வரை உயிர் வாழும்.

பள்ளிக்கு செல்லும் சிறுமிகளிடம் இது அதிகமாக பரவும். பேன் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தால், நமக்கும் பேன் வரும் வாய்ப்பு அதிகம். அவர்கள் உடுத்தும் உடைகளை உடுத்தினாலோ, அவர்களின் படுக்கையில் படுத்தாலோ பேன் வரும் வாய்ப்பு உண்டு.

இது பெரிய மருத்துவ பிரச்சினையல்ல. தலையில் பேன் இருப்பதால் ஒருவர் சுத்தமற்றவர் என்றோ, சுகாதாரம் இல்லாதவர் என்றோ அர்த்தமில்லை. தலையில் அரிப்பு, சிறிதாக சிவந்த நிறத்தில் உருண்டு காணப்படுகிற கட்டிகள், சில நேரத்தில் சொறிந்தால் நீர் வருதல் போன்றவை பேனால் பாதிக்கப்பட்டவருக்கு காணப்படலாம். பேன் தொல்லை இருப்பவரின் முடியின் வேரில் வெள்ளை நிறத்தில் உருண்டு காணப்படும். நல்ல வெளிச்சத்தில் இதை பார்க்கலாம். நெருக்கமான கண்களை கொண்ட பேன்சீப்பை வைத்து, கூந்தலை சீவிக்கொள்ளலாம்.

நவீன மருத்துவத்தில் லோ‌‌ஷன், ‌ஷாம்புகள் உண்டு. இன்னும் வீரியமுள்ள மருந்துகளை டாக்டர் சில நேரம் பரிந்துரைக்கலாம். மருந்தை தேய்த்து பத்து நிமிடம் காத்திருக்க வேண்டும். பின்பு தலையை நன்றாக கழுவவேண்டும். பேன் வந்தவரின் துணிகளை கொதிக்கவைத்த நீரில் முக்கி சுத்தப்படுத்த வேண்டும். தொப்பி, தலை துவட்டும் துண்டு, தலையணை உறை ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

ஆயுர்வேத மருத்துவத்தில் தைலம் உள்ளது. இதை தலையில் தேய்த்து குளித்தால் பேன் தொல்லை குறையும். சீத்தாப்பழ விதைகளை காயவைத்து பொடி செய்து சிறிதளவு எடுத்து சீயக்காயில் கலந்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் ஈறு, பேன் தொல்லை குறையும். வசம்பை தண்ணீர்விட்டு அரைத்து தலையில் நன்றாக தேய்த்து ஊறவைக்க வேண்டும். பிறகு, தண்ணீரில் தலை முடியை நன்றாக அலசினால் பேன் தொல்லை குறையும். துளசி இலையை மை போல் அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால், பேன்கள் செத்து உதிர்ந்துவிடும். கூந்தலும் நன்றாக வளரும்.

50 கிராம் வேப்பம்பூவை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை தலையில் நன்றாக தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து குளித்தால், பேன் தொல்லை குறையும். வால் மிளகை ஊறவைத்து பால் விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்க, பேன் தொல்லை குறையும்.

வேப்பிலை தூள் அரை டீஸ்பூன், கடுக்காய்த்தூள் அரை டீஸ்பூன், வெந்தயத்தூள் 2 டீஸ்பூன், பயத்தமாவு 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன் ஆகியவற்றுடன் வெந்நீரை கலந்து தலையில் பூசிக்கொண்டு, பத்து நிமிடம் கழித்து அலசி குளித்தால் பேன் தொல்லை குறையும்.
Tags:    

Similar News