லைஃப்ஸ்டைல்

சுவையான காரைக்குடி நண்டு மசாலா

Published On 2016-04-27 06:33 GMT   |   Update On 2016-04-27 06:33 GMT
நண்டு மசாலா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக சமைக்கப்படுகிறது. இதில் காரைக்குடி நண்டு மசாலா மற்ற நண்டு மசாலாக்களை விட சற்று வித்தியாசமான சுவையுடையது.
தேவையான பொருட்கள் :

நண்டு - 1 கிலோ
புளிக்கரைசல் - அரை கப்
பட்டை - 2
பிரியாணி இலை -2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு

மசாலாவிற்கு :

துருவிய தேங்காய் - 1 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 3
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* நண்டை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய், முந்திரியை தனித்தனியாக போட்டு நன்கு வறுத்து இறக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிய பின்னர் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

* தக்காளி நன்றாக வதங்கி பின்னர் நண்டு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நண்டுடன் பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும்.

* நண்டு ஓரளவு வெந்த பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவயான காரைக்குடி நண்டு மசாலா ரெடி.

* இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

Similar News