பெண்கள் உலகம்
மரவள்ளிக்கிழங்கு அடை

நார்ச்சத்து நிறைந்த மரவள்ளிக்கிழங்கு அடை

Published On 2021-10-21 11:02 IST   |   Update On 2021-10-21 11:02:00 IST
மரவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மலச்சிக்கல், வயிறுவீக்கம் மற்றும் செரிமான குறைபாடு போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுவிக்க உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

மரவள்ளிக்கிழங்கு - ஒன்று,
இட்லி அரிசி - 200 கிராம்,
துவரம்பருப்பு - 100 கிராம்,
கடலைப்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்),
பூண்டுப் பல் - 2,
மிளகு - 10,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 100 மில்லி.

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கைத் தோலுரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இட்லி அரிசியைத் தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

ஊறவைத்த அரிசியைக் களைந்து, நறுக்கிய மரவள்ளிக்கிழங்குடன் மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்துத் தண்ணீர்விட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அடுத்து ஊறவைத்த பருப்பையும் சேர்த்து, காய்ந்த மிளகாய், இஞ்சி, தோலுரித்த பூண்டுப் பல் போட்டு, மிளகு, உப்பு சேர்த்து அடை மாவுப் பதத்துக்கு கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த மாவை தோசைக்கல்லில் பரவலாக மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் எண்ணெய்விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

சத்தான சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை ரெடி.

Similar News