லைஃப்ஸ்டைல்
தண்ணீர்

தண்ணீர் விரதம்.. தரும் தொல்லை..

Published On 2020-09-28 07:50 GMT   |   Update On 2020-09-28 07:50 GMT
நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் பருகுவதில் நன்மைகளுடன், பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
மாதத்தில் சில நாட்களோ அல்லது வாரத்தில் ஒரு நாளோ எதுவும் சாப்பிடாமல் நிறைய பேர் விரதம் இருக்கிறார்கள். அப்போது தண்ணீரை மட்டுமே சிலர் அருந்துவது உண்டு. உடல் எடையை குறைப்பதற்காக இந்த நடைமுறையை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் பருகுவதில் நன்மைகளுடன், பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு தண்ணீர் விரதம் உதவியாக இருக்கும். பொதுவாக, 24 முதல் 72 மணி நேரம் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. 3 நாட்கள், 7 நாட்கள், 14 மற்றும் 21 நாட்கள் தண்ணீர் விரதம் இருக்கவும் செய்கிறார்கள்.

தண்ணீர் விரதம் எடை இழப்புக்கு வழிவகுக்கும். ரத்த அழுத்த அளவை ஒழுங்குபடுத்தவும் செய்யும். மாதத்தில் ஒருநாள் தண்ணீர் விரதத்தை கடைப்பிடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. இறந்த செல்களை அகற்றி, புதிய செல்கள் தோன்றுவதற்கும் வித்திடும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும். ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பராமரிக்கவும் உதவும்.

ஆனால் நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த விரத்தை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அந்த சமயத்தில் எதுவும் சாப்பிடாததால் உப்பு உடலில் சேர்வதை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்த அளவு சீராகக்கூடும்.

தண்ணீர் விரதத்தை கடைப்பிடிக்கும்போது, உடலில் டிரைகிளிசரைடு அளவுகள் குறைக்கப்படுகின்றன. இது நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாத வாழ்க்கை முறை காரணமாக, உடலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்கள் அதிகரிக்கின்றன. இந்த விரதம் அதைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

தண்ணீர் விரதத்தில் ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், சில ஆபத்துகளும் இருக்கின்றன. விரதம் இருக்கும் சமயத்தில் திட உணவுகள் எதுவும் சாப்பிடாததால் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை எதிர்கொள்ளக்கூடும். வெறும் தண்ணீர் மட்டுமே பருகுவதால் சிறுநீர் வெளியேறும் அளவு அதிகமாகும். அதனால் நீரிழப்பு ஏற்படக்கூடும். உணவு எதுவும் உட்கொள்ளாததால் உடல் பலவீனமாகக்கூடும். மூளைக்கு தேவையான ஆற்றல் கிடைக்காததால் அதன் செயல்பாடும் பாதிப்புக்குள்ளாகும். அதனால் மருத்துவரின் ஆலோசனையை பெற்றே தண்ணீர் விரதம் மேற்கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News