பெண்கள் உலகம்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் குறித்து அதிகம் தேடிய விஷயங்கள்

Published On 2020-08-21 14:43 IST   |   Update On 2020-08-21 14:43:00 IST
ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்கள் கொரோனா வைரஸ் குறித்து அதிகம் தேடிய விஷயங்களை கூகுள் இணையதளம் பட்டியலிட்டு இருக்கிறது.
உலகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய செய்துவிட்டது. பெரும்பாலானவர்களிடம் கொரோனா வைரஸ் குறித்த அச்சமும் அதிகரித்து விட்டது. கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை நாவலை படிப்பதுபோல் இணையதளங்களில் தேடிப்பிடித்து வாசித்து இருக் கிறார்கள். ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்கள் கொரோனா வைரஸ் குறித்து அதிகம் தேடிய விஷயங்களை கூகுள் இணையதளம் பட்டியலிட்டு இருக்கிறது.

உலக அளவில் கொரோனா வைரஸ் என்ற வார்த்தை 50 லட்சத்துக்கும் அதிகமான தடவை பதிவிடப்பட்டு தேடப்பட்டிருக்கிறது. கோவிட்-19 வைரஸ் என்று குறிப்பிட்டும் தேடிப்பிடித்து படித் திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் டிப்ஸ் என்று பதிவிட்டு 1 கோடிக்கும் அதிகமான தடவை தேடியிருக்கிறார்கள். கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்களையும், பாதுகாப்பு வழிமுறை களையும் தேடிப்பிடித்து படித்திருக்கிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு எப்போது நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இணையதளத்தில் தேடலாக தொடர்ந்திருக்கிறது. வீட்டை விட்டு எப்போது வெளியே செல்லப்போகிறோம் என்ற கவலையும் அந்த தேடலில் வெளிப்பட்டிருக்கிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நீக்கப்படுமா? என்பதை அறிந்து கொள்வதற்கான தேடல் 10 லட்சத்தை தாண்டியிருக்கிறது.

கொரோனாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்தலாம் என்ற செய்தி உலா வந்ததால் அதை பற்றிய தகவல்களையும் 6 லட்சம் தடவை தேடி இருக்கிறார்கள்.

ஒருவருக்கு இருமலோ, தும்மலோ இருந்தால் அவரை கொரோனா வைரஸ் தாக்கி இருக்குமோ? என்ற பயமும், பீதியும் நிறைய பேரிடம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகுபவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை அறிந்து கொள்ளும் விதமான தேடல் ஐந்து லட்சத்தை கடந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள் மற்றும் பாதிப்புக்கு ஆளானவர்கள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக மத்திய அரசு ‘ஆரோக்கிய சேது’ என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதுபற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கான தேடல் 3 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும் அதுபற்றிய தேடலும் அதிகரித்திருக்கிறது. பாதிப்புக்குள்ளானவர்கள், இறந்தவர்கள் பற்றிய எண்ணிக்கையை நாடுகள் வாரியாக, மாநிலங்கள், மாவட்டங்கள் வாரியாக தெரிந்து கொள்ளவும் இணைய தேடலை தொடர்ந்திருக் கிறார்கள். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே நடமாடி போலீசில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களையும் தேடி இருக்கிறார்கள். இது தொடர்பான தேடல் ஒன்றரை லட்சத்தை தாண்டி இருக்கிறது.

கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சை பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடல் ஒரு லட்சத்தை தாண்டியிருக்கிறது.

அவசர தேவைக்காக வெளியூர் பயணிப்பதற்கு வழங்கப்படும் வாகன அனுமதி சீட்டு பற்றியும் 50 ஆயிரம் தேடல்கள் பதிவாகி இருக்கின்றன.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறதா? என்ற தேடலும் 50 ஆயிஇரத்தை எட்டியிருக்கிறது.

Similar News