லைஃப்ஸ்டைல்
மாணவச் செல்வங்களுக்கு கொரோனா வராமல் பாதுகாக்கும் யோகா

மாணவச் செல்வங்களுக்கு கொரோனா வராமல் பாதுகாக்கும் யோகா

Published On 2021-10-19 02:29 GMT   |   Update On 2021-10-19 02:29 GMT
பள்ளி மாணவ, மாணவியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய யோகப் பயிற்சிகளை தினமும் காலை, மாலை அரை மணி நேரம் செய்யுங்கள். நீங்கள் பள்ளி சென்றால் நோய் எதிர்ப்பாற்றலுடன் எந்த ஒரு தொற்றுக் கிருமியும் தாக்காமல் சிறப்பாக, நலமாக வாழலாம்.
பத்மாசனம்:

தரையில் ஒரு விரிப்பு விரித்து இரண்டு கால்களையும் நீட்டவும். வலது காலை மடித்து பாதத்தை இடது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைக்கவும். இடது காலை மடித்து பாதத்தை வலது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைக்கவும். முதுகுத்தண்டை நிமிர்த்தி உட்காரவும். கைகளை சின் முத்திரையில் வைக்கவும். ஆள்காட்டி விரல், கட்டை விரல் நுனியை தொட்டு, மற்ற மூன்று விரல்கள் படத்தில் உள்ளது போல் தரையை நோக்கி இருக்கட்டும்.
கண்களை மூடி மெதுவாக மூச்சை இரு நாசி வழியாக இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து கவனிக்கவும். ஐந்து நிமிடங்கள் இருக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.

பலன்கள்:

நரம்பு மண்டலம் நன்கு சக்திப் பெற்று இயங்கும்.
மன அமைதி கிடைக்கும்.
தன்னம்பிக்கை கிடைக்கும்.
தெளிந்த சிந்தனையுடன் செயல்படலாம்.
ரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்கும்.
வாதம், பித்தம், சிலேத்துமம் மூன்றும் உடலில் சமச்சீர் அளவில் இயங்க வழிவகை செய்கின்றது.
மூளை செல்களுக்கு ரத்த ஓட்டம் நன்கு இயங்கும். முதுகெலும்பு இந்த ஆசனத்தில் நேராக இருப்பதால் அதைச் சார்ந்த உள் உறுப்பு, சிறுநீரகம், சிறுகுடல், பெருங்குடல், நுரையீரல், இதயம் நன்கு சக்தி பெற்று இயங்குகின்றது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்.
உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளை கரைக்கின்றது.

வஜ்ராசனம்

செய்முறை:

இந்திரனின் ஆயுதத்தின் பெயர் “வஜ்ஜிராயுதம்” அது போல எதையும் தாங்கும் இதய வலிமையை இந்த ஆசனம் தருவதால் இந்த பெயர். விரிப்பின் மீது கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடக்கி குதிகாலை வலது புட்டத்தின் அடியில் வைக்கவும். இடது காலை இடது புட்டத்திற்கு அடியில் வைத்து கால் முட்டிகளை ஒன்று சேர்க்கவும். படத்தைப் பார்க்கவும். உள்ளங்கைகளை முட்டியின் மீது வைத்து கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

பலன்கள்:


அஜீரணம் நீங்கும்.
இருதய படபடப்பை சரி செய்கின்றது.
மூட்டு வலி, பாத வலி வராது, இடுப்புவலி வராது.
வாதம் வராது.
கிட்னி நன்கு இயங்கும்.
உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.
நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
திடமான நல்ல சிந்தனை எப்பொழுதும் வளரும்.
ரத்த அழுத்தம் வராது.
இதயம், நுரையீரல் நல்ல சக்தி பெற்று இயங்கும்.
மாணவர்களுக்கு எந்த ஒரு வைரஸ் கிருமியும் தாக்காமல் வளமாக வாழலாம்.

பச்சிமோஸ்தாசனம்:

இந்த ஆசனத்தை மிருத்யுஞ்சய ஆசனம் அதாவது எமனை வெல்லும் ஆசனம் என்று அழைப்பர்.

விரிப்பில் கால்களை நீட்டி கிழக்கு திசை நோக்கி அமரவும். இரு கைகளையும் தலைக்குமேல் காதோடு உயர்த்தி மூச்சை வெளிவிட்டுக் கொண்டே குனிந்து முதலில் கால் பெருவிரல்களை தொடவும். பின் படிப்படியாக குனிந்து நெற்றியை இரு கால் முட்டிகளின் மீது வைத்து கைகளை மடித்து கை முட்டியை விரிப்பின் மீது வைக்கவும். சாதாரண மூச்சில் 20 நொடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். இரண்டு முறைகள் செய்யவும். முதலில் கால் பெருவிரலை கைகளால் தொட முயற்சிக்கவும். தொடர்ந்து பயிற்சி செய்யும் பொழுது நான்கு மாதத்தில் முழுமை நிலை வரும்.

பலன்கள்:

சிறுநீரகம் மிகச் சிறப்பாக இயங்கும்.
மனித உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.
நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
தலைவலி வராமல் பாதுகாக்கும்.
வாதம் சரியாகும்.
பசியின்மை, நீரிழிவு, அஜீரணம், மலச்சிக்கல், கல்லீரல் அயர்ச்சி, மண்ணீரல் வீக்கம் முதலியவற்றை சரி செய்கின்றது.
இடுப்பு வலி, மூல வியாதி வராமல் தடுக்கும்.
நரம்பு மண்டலங்கள் நன்றாக இயங்கும்.
நுரையீரல் பலவீனத்தால் ஏற்படும் மூச்சு சம்பந்தமான நோய்கள் நீங்கும். நுரையீரல் சக்தி பெற்று இயங்கும். அதனால் எந்த ஒரு தொற்றுக்கிருமியும் மாணவச் செல்வங்களையும், இந்த ஆசனம் செய்யும் அனைவரையும் தாக்காது.
Tags:    

Similar News