லைஃப்ஸ்டைல்

யோகா - உடற்பயிற்சி சிறந்தது எது?

Published On 2018-03-10 03:58 GMT   |   Update On 2018-03-10 03:58 GMT
உடற்பயிற்சி சிறந்ததா அல்லது யோகா சிறந்ததா என்று பார்க்கும் போது முதலில் புலனாவது இரண்டில் ஏதாவது ஒன்றையாவது கட்டாயம் செய்ய வேண்டும் என்பது தான்.
உடலின் இயக்கத்திற்கு பயிற்சி தருவது, எந்த முறையில் செய்தாலும் சரி, நல்லதே. உடலுழைப்பு இல்லாமல், எந்த வித உடற்பயிற்சிகளும் இல்லாமல் இருப்பவர்களுக்கு தான் வியாதிகள் அதிகம் வருகின்றன. ஆரோக்கியமான உடல் நிலைக்கு யோகா அல்லது உடற்பயிற்சி ஒரு அவசியமான தேவை என்பது தற்போது நிரூபிக்கப்பட்ட விஷயம். உடற்பயிற்சி சிறந்ததா அல்லது யோகா சிறந்ததா என்று பார்க்கும் போது முதலில் புலனாவது இரண்டில் ஏதாவது ஒன்றையாவது கட்டாயம் செய்ய வேண்டும் என்பது. யோகா நமது தேசத்தில் உருவாகி, உலகெங்கும் பரவிய கலை. அதில் உள்ள சில நன்மைகளை பார்ப்போம்.

1. உடற்பயிற்சியில், பெயருக்கு ஏற்ப, உடலின் அவயங்களுக்கு பயிற்சி தரும். உடல் தசைகளுக்கு வலுவூட்டும். உடற்பயிற்சிகளில் உடல் அவயங்கள் இயந்திரகதியில் இயக்கப்பட்டு, தசைகளுக்கு வலிமை சேர்க்கப்படுகிறது. ஆனால் யோகா உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் ‘பயிற்சியை’ தருகிறது. யோகாவின் அங்கங்களான சூரிய நமஸ்காரம், பிராணாயாமம், தியானம் இவைகள் மனதிற்கும் மூளைக்கும் பயிற்சி தருகின்றன. மனநோய்களுக்கும் இவை பயனளிக்கின்றன. இது யோகாவின் சிறப்பு அம்சம்.

2. உடற்பயிற்சியில் இயந்திரம் போல அவயங்கள் இயக்கப்படுவதால், அவற்றை டி.வி. பார்த்துக் கொண்டு அல்லது இசையை அனுபவித்துக் கொண்டு செய்யலாம். பின்னோக்கி வளையும் பயிற்சிகள் இருப்பதில்லை. இதன் சில சமயங்களில் உடலின் அவயங்களை பாதிக்கலாம். யோகாவை செய்யும் போது மனதும் உடலும் இணைந்து தான் செய்யமுடியும். ஒவ்வொரு ஆசனமும் கவனத்துடன், மூச்சு உள்ளிழுத்தோ அல்லது வெளியில் விட்டோ அல்லது மூச்சை நிறுத்தியோ செய்யப்பட வேண்டும். இதனால் உடல் இயக்கத்துடன் மூளையின் இயக்கமும் சேர்வதால் மனது ஒருநிலைப்படுகிறது. தவிர உடல் அவயங்களை முன்னோக்கி வளைத்து ஆசனங்களை செய்தால், உடனே பின்னோக்கி வளையும் மாற்று ஆசனங்களையும் செய்வது யோகாவின் நியதி.



3. உடற்பயிற்சிகளில் காணும் வேகம் யோகாவில் இல்லை. ஆசனங்களை நிறுத்தி நிதானமாக செய்யலாம். உடலை வருத்தி யோகாசனங்கள் செய்ய வேண்டியதில்லை.

4. மூச்சுப்பயிற்சி யோகாவின் முக்கிய அம்சம். தவிர உடற்பயிற்சிகளில் இதயம் அதிக வேலை செய்ய நேரிடலாம். காரணம் உடற்பயிற்சிகள் இரத்த ஒட்டத்தை அதிகரிக்கின்றன. யோகாவும் இரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். ஆனால் மெதுவாக, நிதானமாக, ஆழ்ந்த மூச்சு விடுதலின் மூலமாக செய்யும்.

5. உடற்பயிற்சிகளின் முடிவில் பயிற்சி செய்பவர் களைப்படையலாம். ஆனால் யோகாசனங்களுக்கு பின் களைப்பு ஏற்படாது.

6. ஆசனங்கள் உடலின் உள் அவயங்களை ஊக்குவிக்கின்றன. முக்கியமாக நிணநீர் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. உடற்பயிற்சிகள் வெளி அவயங்களை வலுப்படுத்துகின்றன.

7. யோகாசனங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. உடற்பயிற்சிகள் சரீரத்தை, உடலை வலிமையாக்குகின்றன. எனவே இவற்றை இணைத்து ஒன்றாக செய்யக்கூடாது? செய்யலாம். ஆனால் இரண்டு பயிற்சிகளுக்கும் நடுவே 1/2 மணி இடைவெளி விட வேண்டும். இல்லை காலையில் யோகாவும் மாலையில் உடற்பயிற்சியும் செய்யலாம். இது உங்கள் உடலின் வலிமையை பொருத்தது.
Tags:    

Similar News