லைஃப்ஸ்டைல்
பற்சிதைவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க...

பற்சிதைவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க...

Published On 2020-03-31 06:50 GMT   |   Update On 2020-03-31 06:50 GMT
குழந்தைக்கு முதல் பற்கள் முளைத்த பின்போ அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவோ பல் மருத்துவரை அணுகி குழந்தையின் பல் வளர்ச்சி பற்றி பெற்றோர் ஆலோசனை பெறுவது அவசியமானது.
நமது உடல் ஆரோக்கியமும், பற்களின் ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டது. பற்கள், ஈறுகள் மற்றும் வாய் பகுதி ஆரோக்கியமாக இருந்தால்தான், உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். பற்களை பராமரிப்பது எளிதானது. ஆனால் ஒவ்வொரு வயதிற்கும் ஏற்றாற்போல் பற்களை பராமரிக்கும் விதமும் மாறுபடும்.

தாய் கருவுற்ற ஆறாம் வாரத்திலேயே கருவில் வளரும் குழந்தைக்கு பற்கள் முளைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட தொடங்கிவிடும். அந்த சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சேர்த்துக்கொண்டால் பின்னாளில் குழந்தையின் பற்கள் வலிமையாக இருக்கும்.

குழந்தைக்கு முதல் பற்கள் முளைத்த பின்போ அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவோ பல் மருத்துவரை அணுகி குழந்தையின் பல் வளர்ச்சி பற்றி பெற்றோர் ஆலோசனை பெறுவது அவசியமானது. பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் இனிப்பு பலகாரங்களை அதிகம் உண்பதால்தான் பற்சிதைவு ஏற்படுவதாக கருதுகிறார்கள். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல. சில சமயங்களில் குழந்தைகள் பால் அருந்தியவுடன் அப்படியே தூங்கிவிடுகிறார்கள். பல குழந்தைகள் புட்டிப்பாலை அருந்தியபடியே தூங்கவும் செய்கிறார்கள். குழந்தை பருவத்தை கடந்ததும், கடைகளில் வாங்கும் பாலுடன் சர்க்கரையை கலந்து பருகுகிறார்கள். அப்போது பால், பற்களில் ஒட்டிக்கொள்ளும். அதனால் பாலின் வாயிலாகவும் பற்சிதைவு ஏற்படுகிறது.

அதை தடுக்க பால் குடித்த பின்பு மெல்லிய துணியை கொண்டோ, மிருதுவான பிரஷை கொண்டோ குழந்தைகளின் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு எச்சிலை உமிழத்தெரியாதவரை பற்பசையையோ, பற்பொடியையோ பயன்படுத்தக்கூடாது. பெற்றோரும், வீட்டு பெரியவர்களும் வாய் சுகாதாரத்தை பேணுவதும் அவசியம். இல்லாவிட்டால் அவர்கள் மூலம் குழந்தை களுக்கு பாதிப்பு நேரும். தொடும் போதும், முத்தம் கொடுக்கும்போதும், குழந்தைக்கு நோய் தொற்றுகள், தோல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, குழந்தைகள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கவனமுடன் செயல்படவேண்டும்.

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பற்பசை உள்ளது. அதனை வாங்கி பயன்படுத்த வேண்டும். அதனை கொண்டு குழந்தைகள் தாங்களாகவே பற்களை துலக்குவதற்கும் பழக்க வேண்டும். சத்தான உணவு வகைகளையும் சாப்பிட கொடுக்க வேண்டும். அதன் மூலம் பற்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் பற்களும் சிறுவயது முதலே ஆரோக்கியமாக இருக்கும். அடிக்கடி வாய் கொப்பளிப்பதும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம் என்பதை குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதைக்காட்டிலும் தாங்கள் அதன் படியே நடக்க வேண்டும். அதை பின்பற்றி குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளுக்கு 7 வயது முதல் 12 வயது வரை பால் பற்களும், நிலையான பற்களும் சேர்ந்தே இருக்கும். இந்த சமயத்தில் பற்சிதைவு பிரச்சினை ஏற்படும். அதோடு முகத்தில் தாடை எலும்புகள் வளர்ச்சி பெறுவதால், பல்வரிசை சரியாக அமைவதில் பிரச்சினை ஏற்படலாம். எனவே, வரும் முன் காப்பதே சால சிறந்தது என்பதற்கிணங்க, பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வதுதான் மிகவும் நல்லது.

பதின் பருவத்திலிருந்து பற்களை சரியாக பராமரிப்பதும், காலை மற்றும் இரவு படுக்கபோகும் முன்பு பல் துலக்குவதும் பற்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். பற்சிதைவு ஏற்படாமலும் பாதுகாக்கும்.

பெரியவர்களான பின்பு புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்துதல், புகையிலை போன்ற பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தவிர்த்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பற்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். பல்கூச்சம், எரிச்சல், பற்சிதைவு, ஈறுகளில் வீக்கம், வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் நேர்ந்தால் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இல்லாவிட்டால் பின்னாளில் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். இன்றைய நவீன மருத்துவத்தில் வேர் சிகிச்சை உள்ளிட்ட நுட்பமான சிகிச்சை முறைகள் மூலம் எளிமையாக தீர்வு கண்டுவிடலாம்.

வாயில் பற்கள் முளைத்த நாள் முதல் தொடர்ந்து பற்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சாப்பிடும் உணவு பொருட்கள் அனைத்துமே பற்களை கடந்துதான் உள்ளே செல்கிறது. பெரும்பாலும் உணவு பொருட்களை பற்களால் மென்றுதான் விழுங்குகிறோம். அப்போது பற்களில் உணவு துகள்கள் ஒட்டிக்கொள்ளும். அதனை பொருட்படுத்தாமல் அசட்டையாக இருந்துவிட்டால் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். சரியான முறையில் பற்களை பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பற்களின் எனாமல் (பற்சிப்பி) தேய்ந்து, பற்கள் கூர்மையாகி வாயின் உள் பகுதியை ரணமாக்கிவிடும். அதுவே வாயில் புற்றுநோய் ஏற்பட காரணமாகிவிடும். ஆதலால் பற்களை கவனமாக பாதுகாக்க வேண்டும்.

பற்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பளிச்சென்ற பற்களும், அழகான புன்னகையும், அன்பான வார்த்தைகளும் நம்மை மற்றவர்கள் மத்தியில் உயர்வாக அடையாளம் காட்டுகிறது. தன்னம்பிக்கையும் அளிக்கிறது. அத்தகைய அழகான பற்களையும், ஈறுகளையும் வாய் ஆரோக்கியத்தையும் பேணிக்காப்போம். நிம்மதியாக புன்னகை பூப்போம்.

கட்டுரை: டாக்டர் ஆர்.விஜய் எம்.டி.எஸ், பல்வேர் சிகிச்சை நிபுணர், சென்னை.

Tags:    

Similar News