லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு வளர்ச்சி தரும் விளையாட்டுகள்

குழந்தைகளுக்கு வளர்ச்சி தரும் விளையாட்டுகள்

Published On 2019-10-21 03:31 GMT   |   Update On 2019-10-21 03:31 GMT
விளையாட்டு உடல் வளர்ச்சிக்கும் உள்ளத்து மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கின்றது. விளையாட்டுகளை நாம் விளையாடுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாகவும், சக்திமிக்கதாகவும் வைத்துக்கொள்ளலாம்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதர்களின் ஊக்கசக்தியாக இருந்து வருபவை விளையாட்டுகள் தாம். வீரம், உடல்திறன் மற்றும் பண்பு வளர்க்க, மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டு உதவுகின்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விளையாடுகின்றனர். எதிர்பாராத தோல்விகளை எதிர்கொள்ளவும், மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது.

விளையாட்டு உடல் வளர்ச்சிக்கும் உள்ளத்து மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கின்றது. விளையாட்டுகளை நாம் விளையாடுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாகவும், சக்திமிக்கதாகவும் வைத்துக்கொள்ளலாம். கைப்பந்து, டேபிள் டென்னிஸ், ஓட்டம், வாலிபால், கிரிக்கெட், கூடைப்பந்து, கபடி மற்றும் நீச்சல் என பல்வேறு விளையாட்டுகள் உள்ளன.

உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டான கபடிக்கு தனியிடம் உள்ளது. வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், சிலம்பாட்டம் ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை இன்றும் சிற்றூர்களில் காணலாம். விளையாடுவதால் ஒற்றுமை, சமாதானம் வளர்கிறது. வெற்றி, தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளல் மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு போன்ற பண்புகள் வளர்கின்றன.

விளையாட்டில் ஈடுபடும்பொழுது, அவர்களுக்கு தமது திறமையை அறியவும், வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வித்துறையிலும் சிறந்தவர்களாக திகழ்கின்றனர். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றை கற்றுக்கொள்கின்றனர். இது ஒரு சமுதாயத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும், மரபையும் விளக்க வல்லது.

விளையாட்டு வீரர்களுக்கு நம் நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அரசு முன்னுரிமை அளிக்கின்றது. பி.வி.சிந்து, மேரிகோம் என எண்ணற்ற வீரர்கள் பல்வேறு பதக்கங்களை பெற்று வந்திருக்கின்றனர். எனவே மாணவ-மாணவிகள் கல்விக்கும், விளையாட்டுக்கும் நேரத்தை சரிசமமாக ஒதுக்கி விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்.விளையாட்டையும் ஒரு பாடமாக அறிந்து அதில் நாம் சிறந்து விளங்குவோம்.
Tags:    

Similar News