லைஃப்ஸ்டைல்

அதிகம் டிவி பார்ப்பதால் பாதிக்கப்படும் குழந்தைகள்

Published On 2016-06-06 04:15 GMT   |   Update On 2016-06-06 04:15 GMT
பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் டி.வி.மோகத்தின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள்.
சமீபகாலமாக டி.வி.சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதே சமயம் பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் டி.வி.மோகத்தின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். பல மணி நேரம் தொடர்ந்து டி.வி.பார்ப்பதால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறது சமீபத்தைய கணக்கெடுப்பு ஒன்று.

நாடு முழுவதும் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் மூலம் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. 300 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 20 சதவீதம் பேர் தொப்பையுடன் உள்ளனர்.

இதுதவிர 10 சதவீத குழந்தைகளுக்கு தலைவலியும், 2 சதவீத குழந்தைகளுக்கு காக்காய் வலிப்பும் உள்ளது. 6 சதவீத குழந்தைகளுக்கு உடல் பலவீன நோய்களும் பாதித்திருப்பது தெரியவந்தது. அதிக அளவில் டி.வி.பார்ப்பதால் 53 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மிகவும் தாமதமாகவே தூங்கச் செல்கின்றனர்.

இதனால் அவர்கள் போதுமான ஓய்வு எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. டி.வி.பார்ப்பதால் குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுவதாகவும், அவர்கள் அதிக அளவில் கோபம், எரிச்சல், அடைவதாகவும், 32 சதவீத குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

டி.வி.பார்க்கும் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதில்லை. இதனால் உடல் மற்றும் மன நலத்திற்கு தேவையான அத்தியாவசிய பயிற்சிகள் அவர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது.

அதிக அளவில் டி.வி.பார்க்கும் குழந்தைகளில் 70 சதவீதம் பேருக்கு பேசும் மொழிகளில் தெளிவு இல்லாத நிலை உள்ளது. தாங்கள் சொல்ல நினைப்பதை தெளிவாகச் சொல்ல முடியாமல் திணறுகின்றனர். ஆகவே, பெண்மணிகளே, இந்த ஆய்வு முடிவை பார்த்தாவது நீங்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள்.

அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், மன நலத்திற்கும் நன்மைகளை அள்ளித் தருகிற புத்தகங்களை படிக்க பழக்குங்கள். தினமும் செய்தித்தாள்களை வாங்கி படிக்கச் செய்யுங்கள்! இதன் மூலம் அவர்களது பொது அறிவு வளர்வதுடன் நல்ல சிந்தனையாளர்களாவும், பேச்சாளர்களாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் மேதைகளாவது உங்கள் கைகளில்தான் உள்ளது.

Similar News