லைஃப்ஸ்டைல்

இனிப்புகளுக்கு மேலே ஒட்டப்படும் வெள்ளி இழை ஆபத்தானதா?

Published On 2016-07-13 02:12 GMT   |   Update On 2016-07-13 02:12 GMT
வெள்ளிகூட அதிக அளவில் உடலுக்குள் போனால், அது சருமத்தில் படிந்து, சருமத்தை நீலம் கலந்த பழுப்பு நிறத்திற்கு மாற்றிவிடும்.
ஈயம், பித்தளை, இரும்பு, வெள்ளி, தங்கம் போன்ற பலவகை உலோகங்களில், ‘மந்த உலோகம்‘ என்று, வெள்ளி அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளி பல்வேறு இடங்களில், பல்வேறு விதமாக உபயோகப்படுத்தப்படுகிறது.

வீடுகளிலும், கோவில்களிலும் பாத்திரங்களாகவும், பூஜை பொருட்களாகவும் பயன்படும். யுனானி, ஆயுர்வேத மருத்துவத்துறைகளில் மருந்தாக உபயோகப்படும். ஜைன மதக் கோவில்களில் சிலைகளின் மேல் இடம்பெறும். வெள்ளியை ஆபரணங்களாக உடலின் மீதும், உடையின் மீதும் அணிந்து, அழகு பார்ப்பதுண்டு.

அதெல்லாம் இருக்கட்டும்! நாம் உண்ணும் உணவிலும் வெள்ளியை கலக்கிறோம். உணவின் மேல் வெள்ளியை அணிந்து, அழகு பார்த்து, ரசித்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இது ஆச்சரியமாக இருந்தாலும் உண்மைதான்.

தெற்கு ஆசிய நாடுகள் முழுவதிலும், குறிப்பாக இந்தியாவில், விலை உயர்ந்த சுவீட்களின் மீதும், பிரியாணியின் மீதும் வெள்ளி நிறத்தில் பளபளவென்று மின்னுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்போது பிரியாணிதான் உங்கள் கருத்தைக்கவரும். அதன் மேல் மின்னும் பொருள் என்ன என்ற கோணத்தில் பெரும்பாலும் சிந்திக்கமாட்டீர்கள்.

மெல்லிய வெள்ளி இழைகள் தான் அந்த சுவீட்களின் மீது அமர்ந்து மின்னிக்கொண்டிருக்கிறது. சுபாரி, பான், பீடா, பழங்கள் போன்றவற்றின் மேலும் வெள்ளி இழை பேப்பர்கள் ஒட்டப்படுவதுண்டு.



மென்மை கொண்ட வெள்ளி உலோகத்தை, வெள்ளி படலம், வெள்ளி இழை, வெள்ளி பேப்பர், வெள்ளி ஷீட் என்று பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். ‘வராக்கா’என்று இந்தியில் அழைக்கப்படும் ‘வெள்ளி இழை’, சுவீட்களுக்கு மேலே ஒட்டப்படுகிறது.

கண்களையும், கருத்தையும் கவர்ந்து அதனை சாப்பிடவேண்டும் என்ற உந்துதலை உருவாக்க அந்த வெள்ளி இழை பயன்படுகிறது. அத்தகைய இனிப்புகளை குழந்தைகள் பிரியமாக வாங்கிச் சாப்பிடுவார்கள். பெரியவர்களையும் இந்த வெள்ளி இழை போர்த்திய உணவுகள் கவரத்தான் செய்கின்றன.

ஆண்டுதோறும் சுமார் 2,75,000 கிலோ வெள்ளி உலோகம், இழைகளாக மாற்றப்பட்டு இனிப்புகளின் மீதும், பிரியாணி, பீடா, பழங்கள் போன்ற மற்ற உணவுப் பொருட் களின் மீதும் ஒட்டப்பட்டு உண்ணப்படுகிறது. 275 டன் வெள்ளியை நாம் ஆண்டுதோறும் சாப்பிடுகிறோம் என்றால், அது மிகப்பெரிய அளவே!

சமஸ்கிருத மொழியில் ‘வரக்’ என்று அழைக்கப்படும் வெள்ளி இழைகள் ஒட்டப்பட்ட இனிப்புகளை வாங்குவது அந்தஸ்துக்குரியதாக மக்கள் கருதிக்கொண்டிருக்கிறார்கள். வெள்ளி இழைகள் ஒட்டப்பட்ட இனிப்புகளை பரிசாக கொடுத்தால் அவர் சமூகத்தில் உயர்ந்தவர் என்ற எண்ணமும் உருவாகிக்கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக உணவை அழகுபடுத்தும் பொருளாக வெள்ளி இழை பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரியவருகிறது. வெள்ளியும், தங்கமும் மந்த உலோகங்கள் என்பதால், குறைவான அளவில் சாப்பிட்டால், உடலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் நம்பப்படுகிறது. அந்தக் காலத்தில் மிகப்பெரிய ஐமீன்தார்கள், தங்கபஸ்பம் சாப்பிட்டதாக கதைகளில் படித்து வருகிறோம்.

வெள்ளி இழை எப்படி தயாராகிறது தெரியுமா?

நூறு கிராம் வெள்ளியை எடுத்து, ஒரு அங்குல அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டுகிறார்கள். ஒரு வெள்ளித்துண்டு மீது, ஜெர்மன் பட்டர் பேப்பர் என்று அழைக்கப்படும் ஸ்பெஷல் பேப்பரை வைக்கிறார்கள். அதன் மீது மீண்டும் ஒரு வெள்ளித்துண்டு, அதன்மேல் ஜெர்மன் பட்டர் பேப்பர், இப்படி ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்படுகிறது. பின்பு 8 மணி நேரம் மரத்தால் செய்யப்பட்ட சுத்தியலால் அடிக்கப்படுகிறது. வெள்ளித்துண்டு மிகமிக மெல்லிய இழையாக ஆகும்வரை அடிக்கப்படுகிறது.

ஒரு வெள்ளி இழையின் தடிமன் சுமார் 0.025 மில்லி மீட்டர். இது மனித சருமத்தைவிட மென்மையானது.

பழைய காலத்தில் வெள்ளி இழைகளை உருவாக்கும்போது, ஜெர்மன் பட்டர் பேப்பருக்குப் பதிலாக மாட்டுக் குடலை ( OxGut ) வெட்டி நடுவில் வைத்து, மரச்சுத்தியலால் அடித்திருக்கிறார்கள். அந்தமுறை இப்போதும்

தொடருவதாக நினைப்பவர்கள், ‘வெள்ளி இழையை ஒரு அசைவ பொருளாக’ கருதுகிறார்கள்.

இப்போது நவீன முறையில் வெள்ளி இழை தயாரிக்கிறார்கள். மாட்டுக்குடல் கலாசாரம் இப்போது இல்லை. 100 சதவீதம் சைவமான முறையில் எந்தவித ரசாயனப் பொருளையும் சேர்க்காமல், வெள்ளி இழைகள் தயாரிக்கப்படுகிறது. இரும்பு சுத்தியலும், ஜெர்மன் பட்டர் பேப்பரும்தான் உபயோகப்படுத்தப்படுகிறது என்பது ஐதராபாத்தை சேர்ந்த வெள்ளி இழை உற்பத்தியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

முன்பு ஒருமுறை ‘உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள்’ புனேயில் இனிப்புப் பலகாரக் கடைகளில் சோதனை செய்தபோது, வெள்ளி இழைகளுக்குப் பதிலாக அலுமினிய இழைகளை இனிப்புகளின் மீது ஒட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அலுமினியம் உடலில் அதிக அளவில் சேர்ந்தால், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகிவிடும். அது கால்சியத்தை எலும்பில் படியவிடாது. அதனால் மூளையிலுள்ள திசுக்களில் அலுமினியம் படிய ஆரம்பித்து ‘அல்ஸெய்மர் நோய்’ தோன்றக்கூடும்.

அலுமினியம் மட்டுமில்லை, வெள்ளிகூட அதிக அளவில் உடலுக்குள் போனால், அது சருமத்தில் படிந்து, சருமத்தை நீலம் கலந்த பழுப்பு நிறத்திற்கு மாற்றிவிடும். இதற்கு மருத்துவ மொழியில் ‘அர்ஜைரியா’ என்று பெயர். இது உடலுக்கு தீங்கில்லை என்றாலும் நல்லது இல்லை.

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டாலும், மக்களுக்கு இனிப்பு உணவுகளின் மீதான மோகம் நீங்கவில்லை. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இனிப்புகளை மிதமான அளவில் சாப்பிடுங்கள். இனிப்புகள் மீது ஒட்டப்பட்டிருப்பது எந்த மாதிரியான இழை என்பதை கண்டறிவது சிரமம் என்பதால், இழை சேர்க்கப்படாத உணவுகளை வாங்கி உண்ணுவதில் ஆர்வம் காட்டவேண்டும்.

Similar News