வழிபாடு

எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி திருவிழா

Published On 2023-05-31 08:42 GMT   |   Update On 2023-05-31 08:42 GMT
  • 3-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்
  • 5, 6, 7 ஆகிய தேதிகளில் தசாவதார சேவை நடைபெறுகிறது.

பரமக்குடி பகுதி எமனேசுவரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்திமான பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். கடந்த 23-ந் தேதி முதல் காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கியது. தினமும் வரதராஜ பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குகிறார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு மண்டகப் படிகளுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 4-ந் தேதி காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி மேலச்சத்திரம் வழியாக பெரிய கடை பஜார் உள்பட முக்கிய பகுதிகளுக்கு சென்று வண்டியூர் சென்றடைவார்.

5, 6, 7 ஆகிய தேதிகளில் வைகை ஆற்றில் தசாவதார சேவை நடைபெறுகிறது. 8-ந் தேதி இரவு வைகை ஆற்றில் இருந்து எழுந்தருளி விதிஉலா வந்து 9-ந் தேதி காலை கோவிலுக்கு சென்றடைவார். இரவு கண்ணாடி சேவை நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், எமனேசுவரம் சவுராஷ்ட்ர சபை நிர்வாகிகளும், கவுன்சிலர்களும் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News