வழிபாடு

தேரோட்டம் நடந்தபோதுஎடுத்தபடம் (உள்படம்: உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி)

பிரம்மோற்சவ விழா கோலாகலம்: திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தேரோட்டம்

Published On 2023-06-03 06:06 GMT   |   Update On 2023-06-03 06:06 GMT
  • திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷம் எழுப்பி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
  • பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடந்தது. கோவில் சன்னதியில் தொடங்கிய தேரோட்டம் கர்னால வீதி, பேரி வீதி, காந்தி வீதி வழியாக கோவிலின் ரத மண்டபத்தை வந்தடைந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷம் எழுப்பி வடம் பிடித்து தேர் இழுத்தனர். வீதி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், சாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம் முடிந்ததும் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சாமிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது.

அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர், 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதைத்தொடர்ந்து இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

நாராயணவனம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

Similar News