வழிபாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி நாளை தொடங்குகிறது

Published On 2022-09-25 08:46 GMT   |   Update On 2022-09-25 08:46 GMT
  • நாளை தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது.
  • 4-ந்தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரம் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மாலையில் பராசக்தி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

வருகிற 26-ந் தேதி மாலை பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வாண வேடிக்கையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தொடர்ந்து 27-ந் தேதி ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரமும், 28-ந் தேதி கெஜலட்சுமி அலங்காரமும் 29-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 30-ந் தேதி ரிஷப வாகன அலங்காரம் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் செய்யப்பட உள்ளது.

தொடர்ந்து 1-ந் தேதி ஆண்டாள் அலங்காரமும், 2-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 3-ந் தேதி லிங்க பூஜை அலங்காரமும், 4-ந் தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரமும் நடைபெற உள்ளது.

மேலும் அன்று காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலையில் சரஸ்வதி பூஜை மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News